May 19, 2015

விதையின் விலாசம்! – புகழேந்தி தங்கராஜ் !

 புகழேந்தி தங்கராஜ்
 கதை எழுதுவதென்று
முடிவெடுத்த கணத்தில்
கண் முன்னே விரிந்ததெல்லாம்
கண்ணீர்க்கதைகள்…
எதை எழுதுவது?
ஒருமுறைக்கு இருமுறை
யோசித்த பிறகுதான்
எழுதுகிறேன் இதை!

இது
ஒரு விதையின் விலாசத்தை
விவரிக்கிற முயற்சி…
கவிதையென்றோ….
கதையென்றோ….
எப்படியாயினும் இதை
அழைக்கலாம் நீங்கள்..
உண்மை – என்றே இதை
விளிக்கிறேன் நான்!
******************************************************
இரண்டாயிரத்து ஒன்பது பிறந்து
மூன்று மாதங்கள்
முடிந்துவிட்டன.
பங்கருக்குள் இருக்க நேரும்
அவலம் மட்டும்
முடியவில்லை
அவர்களுக்கு!
முரசுமோட்டையிலிருந்து
அம்பலவன்பொக்கணை வரை
மாறிக்கொண்டேயிருக்கிறது இடம்…
பதுங்குக்குழிகள் மட்டும்
மாறவேயில்லை!
இடப்பெயர்ச்சி என்பது
அவர்களைப் பொறுத்தவரை
ஒரு குழியிலிருந்து
இன்னொரு குழிக்கு மாறுவது….
அவ்வளவே!
அம்பலவன் பொக்கணை கரையில்
கண்ணுக்கெட்டிய தொலைவுவரை
பதுங்குக் குழிகள்…
குழிகளுக்குள் உயிர்கள்
மறைந்திருப்பதற்கான
அறிகுறி எதுவும்
தெரியாது வெளியே!
தப்பித்தவறி ஒரு தலை தெரிந்தாலும்
விண்ணில் பாயும் இரும்புப் பறவைகள்
வாழ அனுமதிக்குமா அவர்களை?
உள்ளேயிருந்து வெளிவருகிற
மூச்சுக்காற்றின் ஓசை
கடல் அலைகளின் ஓசையைக் காட்டிலும்
கனமாயிருப்பதை
குழிகளின் அருகே செல்வோர் மட்டுமே
கவனிக்க முடியும்.
மற்றபடி
அந்தக் காற்றின் திசையெங்கும்
பாஸ்பரஸ் வாடை….
அருகில் மிக அருகில்
துணைக்கு ஆளில்லாமல்
தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கிறது
ஈழத்துக்குள்ளும் நீலம் சுமக்கும் கடல்….
தொலைவில் எங்கோ கேட்கிறது
காற்றைக் கிழித்தபடி
கிபீர் பறக்கிற ஓசை….
அந்த இரும்புப் பறவையிலிருந்து
வீழ்கிற குண்டுகளால்
அதிர்கின்றன இங்கேயிருக்கிற
பதுங்குக் குழிகள் அனைத்தும்!
வெளியில் தெரியும் சூரியஒளியில்
நேரம் கணிக்கும் குழந்தைகள் மட்டும்
குழிக்கு வெளியிலிருந்து
கசிகிற ஒளி பார்த்து -
மாமா எங்கே – என்று
பொறுமையிழந்து கேட்கின்றன.
“பெடியன்கள் நிச்சயம் வருவார்கள்” -
மாமாவைத் தேடும் தன் குழந்தைக்குப்
பதிலளிக்கும்போதே
குரலுடைகிறது தாய்க்கு!
வள்ளிபுனம் வரை
அந்த மழலைகளைத் தேடிவந்த
பெடியனின் பெயரைக் கேட்டபோது
அவன் வாய்விட்டுச் சிரித்ததை
அவளால் மறக்க முடியவில்லை…
‘என் பிள்ளை செல்வம் மாதிரியே இருக்காய்..
அதனாலதான் கேட்டனான்’…..
தயக்கத்தோடவள் சொல்வதற்குள்
வெடிச்சிரிப்புடன் ஒப்புதல் கொடுத்தான் -
‘செல்வமென்றே வைத்துக் கொள்ளுங்கோ!’
அதற்குப் பிறகு பேசவில்லை அவள்.
செல்வத்தைப் போலவே
இவனுக்கும் சுருண்ட முடி…
அவனைப் போலவே ஆறு அடி.
அவள் மட்டுமில்லை…
அவனும் பேசவில்லை.
அவன் என்றால்…. அந்த செல்வம்.
கொண்டுவந்த கஞ்சியை
குழியிலிருந்த குழந்தைகளுக்கு
பகிர்ந்துகொடுப்பதிலேயே கவனம் செலுத்தினான்.
வேறொன்றுமில்லை அந்தக் கஞ்சி….
அரிசி மாவு, உப்பு, சர்க்கரைக் கரைசல்.
அந்த எளிய உணவை
அமுதம் மாதிரி பருகின குழந்தைகள்.
‘குழியில் வேறு குழந்தைகள் இருக்கிறார்களா’ -
கேட்ட அவன் குரலில்
இயல்பாகவே இருந்தது
ஒரு கட்டளைத் தொனி.
இன்னொரு குழந்தை இருப்பதாகச் சொல்லி
கூடுதல் கஞ்சி யாரும்
கேட்டதில்லை இதுவரை.
“குழந்தைகளுக்கு ஐ.நா. அனுப்பிய
உணவைக்கூடத் தடுத்திருக்கிறாங்கள்…
குழந்தைகளைப் பட்டினி போட்டுக்
கொல்ல நினைக்கிறார்கள்…
எந்தக் குழந்தையும்
பட்டினி கிடக்கக் கூடாதென்று
இயக்கம் நினைக்கிறது…”
அரிதாகப் பேசிய ஒரு நாளில்
அவனிடமிருந்து இதை அறியமுடிந்தது!
ஆபத்து குறித்த அச்சமின்றி
குழி குழியாகத் தேடிவந்து
குழந்தைகளுக்குக் கஞ்சி கொடுப்பதைப்
பாராட்டியபோது அதை ஏற்கவில்லை அவன்.
‘கொண்டுவருகிற கஷ்டமெல்லாம்
இந்தக் குழந்தைகளின்
முகம் மலர்வதைப் பார்த்ததும் போயிடுதே’-
சொல்லும்போதே அவன் முகத்தில் பூரிப்பு.
‘மாமா வாரேன்’ -
சொல்லிச் செல்லும்போது
தன்னைத்தானே
மாமன் – என்று
பிரகடனப்படுத்திக் கொள்ளும்
பெருமிதம்.
அன்றைக்கும் அப்படித்தான்….
மாமா வாரேன் – என்று சொல்லிவிட்டு
செல்வம் சைக்கிளில் சென்ற
சிறிதுநேரத்தில் கேட்டது
பெருத்த வெடிச்சத்தம்.
செல்வத்துக்கு
ஏதும் நேர்ந்திருக்கக் கூடாதென்று
அத்தனைக் குழியிலும் பிரார்த்தனை நடந்தது.
அதற்கு அடுத்தநாள்
சைக்கிள் சத்தம் தொலைவில் கேட்டபோது
குழிக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தவர்கள்
குழந்தைகள் மட்டுமல்ல… பெரியவர்களும்!
தூரத்து சைக்கிள் அருகில் நெருங்க
அத்தனைப் பேரும் மனமுடைந்தார்கள்.
கஞ்சிப் பாத்திரத்துடன்
சைக்கிளில் வந்தது
செல்வமில்லை…
வேறொரு பெடியன்.
‘செல்வம் வரலையா’ -
கேட்பதற்குள் குரலுடைந்துவிட்டது
முன்பு செல்வத்தின் பெயரைக் கேட்ட தாய்க்கு.
‘நேற்று செல்லடில இறந்த
அந்த அண்ணை பேர் செல்வமோ…’ -
அவன் திருப்பிக் கேட்க,
உறைந்து போனார்கள் அத்தனைப் பேரும்!
‘இனி நான்தான் வருவேன்’ என்றான் புதியவன்.
அப்போதைப் போலவேதான் இப்போதும்…
செல்வத்தை அடுத்து வந்த பெடியனுடன்
இரண்டே நாளில் ஒட்டிக்கொண்டன
அத்தனைக் குழந்தைகளும்!
மாமா – என்று
அன்போடழைக்கின்றன
இந்தப் பெடியனையும்!
அவனைப் போலவே இவனும் கேட்கிறான் -
குழியில் வேறு குழந்தைகள் இருக்கிறார்களா?
மாமா வாரேன் – என்று
மகிழ்ச்சியோடிவனும் விடை பெறுகிறான்.
மேலதிகமாக -
‘பங்கரை விட்டு வெளியே வரக்கூடாது’ என்று
மழலைச் செல்வங்களை எச்சரிக்கிறான்,
எந்தப் பாதுகாப்புமின்றி
தான் நடமாடுவது குறித்த அச்சமின்றி!
எங்கோ தொலைவில் கேட்கிறது
அவன் சைக்கிள் வருகிற ஓசை.
குழிக்குள்ளிருந்து
குழந்தைகள் எட்டிப் பார்க்கின்றன….
*****************************************************************
நீண்ட ஷர்வானி….
மேலணிந்த அங்கியில் ஒற்றை ரோஜா…..
சாச்சா நேருதான்
எங்கள் தலைமுறையில் மாமா இங்கு!
எம் உறவுகளின் குழந்தைகளுக்கோ
கசங்கிப் போன லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு
கிழிந்து போன பனியனுடனும்
கஞ்சிப் பாத்திரத்துடனும்
சைக்கிளில் வந்த
ஒவ்வொரு பெடியனும் – மாமா இன்று!
அந்த மழலைகளுக்கு
உணவு சென்ற வழிகளைக் கூட
தடுத்த மிருகங்களை
நண்பர்களென்று அறிவிக்கிறீர்கள் நீங்கள்.
குண்டு மழையைப் பொருட்படுத்தாமல்
அந்த மழலைகளைத் தேடிவந்து
அவர்களது பசிப்பிணி தீர்த்த பெடியர்களை
நெடியவரென்று போற்றுகிறோம் நாங்கள்.
தற்கொலைப்படை வைத்திருந்ததுதான்
உலகின் கொடூரமான இயக்கம்
என்கிறீர்கள் நீங்கள்.
மழலைகள் உயிர் பேண
தம் உயிர் கொடுக்கும்
தற்கொடைப் படையைத்
தயாராய் வைத்திருந்த
அந்த இயக்கம் தான்
உலகின் உன்னதமான இயக்கம்
என்கிறோம் நாங்கள்.
ஒரே ஒரு முறையாவது
முள்ளிவாய்க்கால் மண்ணை
முத்தமிடவேண்டும்….
அழுவதற்காக அல்ல…
எம் ஒன்றரை லட்சம் உறவுகளின் ரத்தத்தாலும்,
எங்கள் பெடியன்களின்
உறுதியால் உறைந்த குருதியாலும்
சுத்திகரிக்கப்பட்ட அந்த மண்ணைத்
தொழுவதற்காக!

No comments:

Post a Comment