April 26, 2015

வடக்கு மாகாணத்தைப் பிரிக்கும் எண்ணம் எமக்கு கிடையாது; பிரதி அமைச்சர் விஜயகலா!

வடக்கு மாகாணத்தை எக்காலத்திலும் இரண்டாக பிரிக்க விடமாட்டோம். அவ்வாறானதொரு எண்ணம் எம்மிடம் கிடையவே கிடையாது என மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.


பொருளாதார அமைச்சின் கீழ் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி யாழ். சிறுப்பிட்டியில் திறந்து வைக்கப்பட்டது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 73 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இந்தப்பகுதியில் மூன்றாவது வங்கி இன்று முதல் ஆரம்பமாவதையிட்டு மகிழ்வடைகின்றேன். இவ்வாறான செயற்பாடுகள்  இந்தப்பகுதியின்  அபிவிருத்தியையே காட்டுகின்றது.

இன்று பாரிய பிரச்சினை வேலையில்லாப்பிரச்சினை உள்ளது. எனவே சமுர்த்தி கூடாக பயனாளிகளின் எண்ணிக்கையை கூட்ட வேண்டும்.

கடந்த கால யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தற்போது 28 நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள எமது மக்கள்  நிவாரணங்களோ , சமுர்த்தியோ இல்லாது இருக்கின்றனர்.

அங்குள்ள மக்களுக்கு இவ்வாறான வங்கிகள் ஊடாக உதவிகளை மேற்கொள்ள வேண்டும்.     ஆட்சி மாற்றத்தின் பின் ஊடகங்களும் மக்களும் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்த இந்த  நல்லாட்சியே காரணம்.

அத்துடன் அனைத்து மாகாண சபைகளும் சுதந்திரமாக இயங்கி வந்தநிலையில் எமது வடக்கு மாகாண சபை இரண்டு வருடமாக முடக்கப்பட்டு வந்தது.

இன்று சுதந்திரமாக இயங்க நல்லாட்சியே காரணம்.   நீண்டகாலமாக இழுபறியில் இருந்த வடமாகாண ஆளுநர் ஆட்சி மாற்றத்தின்  பின்னர் மாற்றப்பட்டார். பிரதம செயலாளர் மாற்றப்பட்டார்.

அதேபோல எதிர்காலத்தில் ஊழல்களை இனங்கண்டு அவற்றை மேற்கொள்பவர்களையும் எமது நல்லாட்சியில் அவர்களையும்  மாற்றுவோம்.

நாங்கள்  வடக்கு மாகாணத்தை எக்காலத்திலும் இரண்டாக பிரிக்க விடமாட்டோம். அவ்வாறானதொரு எண்ணமும் எமக்கு கிடையாது. தற்போது இடம்பெற்றுவரும் இ.போ.ச விடயம்  தொடர்பில் எனக்கு தொடர்பு கிடையாது.

நேற்றைய பத்திரிகைச் செய்திகளின்  அடிப்படையில் குறித்த விடயத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்  கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.

இது தொடர்பில் நாளை மறுதினம்  பிரதமருடன்  நேரடியாக கலந்துரையாடவுள்ளேன்.

ஒரே தடவையில் தீர்வினைப் பெறமுடியாது படிப்படியாகவே இதனைச் செய்ய வேண்டும்.    ஏனெனில் நாங்கள் அடுத்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றோம்.

2009 ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலை , ஊழல்களை விசாரணை செய்வதற்கு எதிர்க்கின்றார்கள் நாடாளுமன்றத்தில் பாய், தலையணை போட்டு நித்திரையும்  கொண்டிருக்கின்றார்கள்,   அன்று சர்வாதிகாரமே நடைபெற்றது.

ஆனால் இன்று நாட்டில் நிர்வாகம்  நடைபெறுகின்றது.  நாடாளுமன்றத்தில் இருந்த நாங்களும்  அன்று எமது எதிர்ப்பை காட்டி  இருந்தால் எமது அப்பாவி மக்களை காப்பாற்றி இருக்கலாம்.

அதேபோல எதிர்வரும் காலத்தில் எமது பகுதி மக்கள்  நல்லவர்களைத்  தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அதன்மூலமே நாங்கள் மக்களது பிரச்சினைகளைத்  தீர்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

இன்று குறித்த நிகழ்வில் பங்கெடுக்கக் கூடாது என உத்தியோகத்தர்களையும்  பயனாளிகளையும் சிலர் இடைநிறுத்தியுள்ளனர்.

இடைநிறுத்தியவர்கள் எந்த விதத்திலும் அதிகாரம்  அற்றவர்கள் .   இந்த அதிகாரம்  இன்றைய நல்லாட்சியில் யாழ். மாவட்ட அரச அதிபருக்கும் , மாவட்ட பணிப்பாளருக்கும்  அவர் ஊடாக பிரதேச செயலருக்கும் உள்ளது.

இதனைவிடுத்து வீதியில் நிற்பவர்கள் மக்களையும் பயனாளிகளையும்  நிறுத்துவதற்கு எமது அரசில் இடமில்லை. இவ்வாறான செயற்பாட்டிற்கு இடமளிக்கப் போவதும் இல்லை.

ஒட்டு மொத்த ஒற்றுமையையே  காட்ட வேண்டும். ஆயுதக் கும்பல்களுக்கு இடமளிக்காது தமிழ் மக்கள்  மீது அக்கறையுள்ளவர்களை தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

இந்த அரசிலேயே எமக்குரிய தீர்வுத்திட்டத்திற்கு வழிவகுக்க வேண்டும். இல்லையேல் முன்னைய காலங்களைப் போல பிரச்சினைகளுக்கே முகம் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்..

No comments:

Post a Comment