February 1, 2015

நாங்கள் கொடுத்த அழுத்தமே சர்வதேச விசாரணைக்கு காரணமாம் - மாவை சேனாதிராஜா!

ஐ.நா. சர்வதேச விசாரணை அறிக்கையை வெளியிடும் நடவடிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்புடன் செயற்படும் என தமிழரசுக் கட்சியின்
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
சுமந்திரனின் பாராட்டுவிழா நாவலர் கலாச்சார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு ஊடவியலாளரிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
நாங்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக சர்வதேச விசாரணை தற்போது நடக்கின்றது. போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வைக்கப்பட்ட பிரேரணை தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும். இதனை திட்டவட்டமாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதற்காக தொடர்ந்தும் நாங்கள் செயற்படுவோம். கூட்டமைப்பு இதற்காக முன்னின்று செயற்படும் ஒருபோதும். சர்வதேச விசாரணையிலிருந்து பின்னிற்காது. இது தொடர்பான மாற்றுக்கருத்துக்களும் இல்லை. இதிலிருந்து விலகிப்போவதும் இல்லையெனக் கூறினார்.
சர்வதேச விசாரணைக்கு தாங்ககே முழுக்கக் காரணம் என்று கூறும் மாவை தலைமையிலான தமிழரசுக் கட்சி வடமாகாணசபையில் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்பதை தீர்மானத்தைக் கொண்டு வருவதை தொடர்ந்து தடுத்து வருகின்றது. ஜெனீவா வரை வந்த கூட்டமைப்பு இலங்கை நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை ஆணித்தரமாக கூற மறுத்து வருகிறது. போர்க்குற்ற சாட்சியங்களை சேகரித்து ஜ.நாவுக்கு அனுப்பி வைக்க முன்வராத கூட்டமைப்பு எந்த வகையில் அழுத்தங்களைக் கொடுத்ததாகக் கூறுகின்றது என்பது தான் புரியவில்லை.
உண்மையில் தமிழர் தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தனிப்பட்ட நபர்களின் முயற்சிகள், அமைப்புகளின் முயற்சிகள், மக்களின் போராட்டங்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் தேசிய நலன் சார்ந்த இலங்கை மீதான அணுகுமுறைகள் என்பனவே இந்த அழுத்தங்கள் ஏற்படக் காரணம். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை கூறுவது போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் முழுக் காரணம் என்பதை எவருமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தலைமைகள் தவிர்ந்து குறிப்பிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே வன்னி யுத்தத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை வெளிப்படையாக கூறிவருகிறார்கள். அதிலும் ஓரிருவர் வெளியில் இனப்படுகொலை, தேசியம் என ஒருபுறம் பேசிக்கொண்டு மறுபுறம் சம்பந்தனுக்கு சோப்புப் பூசும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்களின் செய்திகள் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.

No comments:

Post a Comment