August 3, 2016

குமரபுரத்தில் இடம்பெற்ற 25 பேரின் மரணத்திற்கே 20 வருடம் கடந்தும் நீதியை வழங்காத இந்த நாடு இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றத்திற்கு நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை கிடையாது!

குமரபுரத்தில் இடம்பெற்ற 25 பேரின் மரணத்திற்கே 20 வருடம் கடந்தும் நீதியை வழங்காத இந்த நாடு இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றத்திற்கு நீதியை வழங்கும் என்ற நம்பிக்கை கிடையாது  என நேற்றைய தினம் பூநகரியில் இடம்பெற்ற நல்லி ணக்கம் தொடர்பாக மக்கள் கருத்தரியும் செயலணியில் பங்கு கொண்டவர் தெரிவித்தார்.


இது தொடர்பில் இங்கு கருத்து வெளியிட்ட முழங்காவிலைச்  சேர்ந்த ஜெகநாதன் மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கையில்    இடம்பெற்ற போர்க்குற்றத்தினை தவிர்த்து ஓர் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது.  தமிழ் மக்களிற்கு எதிராக இடம்பெற்ற பாரிய சம்பவங்கள் எவற்றிற்குமே தீர்வு வழங்கப்படவில்லை.

இதற்கு உதாரணங்களாக குமரபுரம் , உடும்பன்குளம் படுகொலை , மூதூர் அக்சன் பாம் படுகொலை , செம்மணியில் 600 பேரின் படுகொலை இவை எவற்றிற்குமே இன்று வரைக்கும் நீதிவழங்காத இந்த இலங்கை ஆட்சியாளர்கள் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் போர்க் குற்றங்களிற்கு இலங்கை அரசின் விசாரணைகள் மீது எமக்கு நம்பிக்கை கிடையாது.

உங்கள் செயலணியால் அமைக்கப்படும் அலுவலகங்கள் கிளிநொச்சியில் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். அதில் எமது மொழி தெரிந்த ஒருவரை எமக்காக பாடுபடக்கூடியவரை ஐ.நாதான் நியமிக்க வேண்டுமே அன்றி இலங்கை அரசு நியமித்தால் அச் செயல்பாட்டின் பலனைப் பெறமுடியாது.

எமது நாட்டில் இடம்பெற்ற குற்றங்களிற்கான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அதற்காக நீதியான விசாரணை வேண்டும் அதில் நடுநிலையான தீர்ப்பாளர்கள் , வழக்காளர்கள் வேண்டும்.
இவ்வாறான நடுநிலையாளர்களை சர்வதேசத்தின் மத்தியில் இருந்தே நியமிக்கவேண்டும். இவ்வாறே ருவாண்டா , கம்போடியா நாடுகளில் இடம்பெற்றது.

இதற்கு அப்பால் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற உண்மையை கண்டறியும் செயல் மூலம் நெல்சன் மண்டேலாவின் மனைவியும் ஓர் கொலையுடன் தொடர்பு பட்டார் என தெரிய வந்தவேளையின் நெல்சன் மண்டேலா தனது மனைவியை விவாகரத்துச் செய்தார். ஆனால் எமது ஆட்சியாளர்கள் அவ்வாறு இல்லை

இலங்கையில் கடந்தகாலங்களிலும் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவைக்கு என்ன இடம்பெற்றது என்பதே தெரியாது. 77ம் ஆண்டு ஜே. ஆரினால் சன்சோலி விசாரணைக்குழு அமைத்து விசாரணைகளும் இடம்பெற்றது.

ஆனால் அதில் என்ன இருக்கும் என்றே எவருக்கும் தெரியாது. இவ்வாறு இங்கு இடம்பெற்ற கொலைகள் , அழிவுகளிற்கு நீதி கிடைக்காத நிலையில் மறுபக்கம் அரசியலின் பெயராலும் எமது பிரதேசம் அழிக்கப்படுகின்றது.

இதற்கும் நீதியில்லை. முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் மகிந்த காலத்தில் இருந்து தனி ஒரு மனித இலாபத்திற்காக அந்தப் பிரதேசத்தின் இயற்கை வளமான மலையே வெடி வைத்து தகர்த்து அள்ளிச் செல்லப்படுகின்றது. இவற்றினை எந்தச் சட்டமும் தடை செய்யவில்லை.

மறுபுறத்தில் மன்னாரை ஓர் முஸ்லீம் அமைச்சர் சுரண்டுகின்றார். அவர் தற்போதும் அமைச்சர் என்பதால் கேள்வியே இல்லை. இவற்றை எல்லாம் பகிரங்கமாக கூறினால் அச்சுறுத்தப்படுகின்றோம்.

இன்றுவரை எங்கு என்ன இடம்பெற்றாலும் நிகழ்விற்கு உரியவர்கள் செல்ல முன்பு புலனாய்வாளர்கள் சென்று காத்திருக்கின்றனர்.

இவற்றை எல்லாம் கட்டுப்படுத்தாமல் நல்லிணக்கத்தை எவ்வாறு பெறமுடியும்.  முதலில் இயல்பான நிலையும் பின்னர் நீதியான செயல்பாட்டின்மூலம் சர்வதேச பிரதிநிதிகளின் மூலம் உண்மை கண்டறியப்பட்ட பின்பே அரசு கூறும் நல்லிணக்கத்தினை தேட முடியும். நல்லிணக்கமும் சர்வதேச கூட்டின்மூலம் அழுத்தத்தினைப் பிரயோகித்து பனிய வைத்துப்பெறமுடியாது. என்றார்.

No comments:

Post a Comment