July 31, 2016

மனைவியை கொன்ற இராணுவ வீரர்!

மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற ராணுவ வீரர் மற்றும் அவரது அம்மாவை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா கேதாண்டப்பட்டி சுகர்மில் குடியிருப்பில் வசிப்பவர் மாரிமுத்து(55), சர்க்கரை ஆலை ஊழியர்.


இவரது மனைவி மீனா(50). மகன் திருப்பதி(24). இவர் கொல்கத்தாவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். திருப்பதிக்கும் நாட்றம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த சித்ரா(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் திருப்பதி ராணுவ பணிக்கு சென்று விட்டார். தற்போது ஒரு மாத விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

இவர் தனது மனைவி சித்ராவிடம், ‘உனக்கு சுகர் மில்லில் வேலை வாங்கி தருகிறேன். இதற்கு தேவையான ரூ.3 லட்சத்தை உனது பெற்றோரிடம் இருந்து வாங்கி வா என கூறினாராம். இதுபற்றி சித்ரா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அவர்கள் நேற்று காலை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை ஒரு வாரத்திற்குள் தருவதாக கூறியுள்ளனர். இந்த பணத்தை வாங்கிக்கொண்ட திருப்பதி மீதி பணத்தை வாங்கி வரும்படி கொடுமைபடுத்தியதாக தெரிகிறது. இதற்கு திருப்பதியின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தார்களாம். பணம் தொடர்பாக நேற்று மாலை கணவன், மனைவியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த திருப்பதி, மனைவி சித்ராவை சரமாரியாக தாக்கி சூடு வைத்துள்ளார். மேலும் அவரது கழுத்தை நெரித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் சித்ரா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவலறிந்த சித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர்.

அங்கு தனது மகள் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இதை தொடர்ந்து சித்ராவின் பெற்றோர் நாட்றம்பள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ராவின் கணவரான ராணுவ வீரர் திருப்பதி, அவரது தாய் மீனா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான திருப்பதியின் தந்தை மாரிமுத்துவை தேடி வருகின்றனர். நாட்றம்பள்ளி அடுத்த வெக்கல்நத்தம் ஊராட்சியில் கள்ளக்காதல் தகராறில் கட்டிட மேஸ்திரி கொலை வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் இளம்பெண் கொலை சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

No comments:

Post a Comment