July 18, 2016

லசந்த கொலை வழக்கில் கைதான இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த அதிகாரியை நேற்று முன்னிலைப்படுத்திய போதே நீதிபதி மொஹமட் சஹாப்தீன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 
லசந்த படுகொலை தொடர்பில் விசாரணை நடாத்திவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார் உடலகம என்ற சாஜன்ட் மேஜர் தர இராணுவப் புலனாய்வு அதிகாரியை கைதுசெய்திருந்தனர். இதனையடுத்து நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் குறித்த அதிகாரி முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விசாரணைகளுக்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குறித்த அதிகாரியை 24 மணித்தியாலங்கள் விசாரணைகளுக்கென குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் நேற்று கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த அதிகாரியை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். எதிர்வரும் 27 ஆம் திகதி குறித்த அதிகாரி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment