June 1, 2016

முஸ்லிம்களுக்கும் மஹிந்தவிற்கும் விரிசல் ஏற்படுத்தவே தாஜூடின் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது!– நாமல்

முஸ்லிம் மக்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்தவே
ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை குறித்து குற்றம் சுமத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி தேர்தல் அண்மித்த போது மஹிந்தவிடமிருந்து முஸ்லிம் மக்களை விலக்கும் நோக்கில் பல்வேறு தந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த தந்திரோபயங்களில் ஒன்றே வசிம் தாஜூடின் சகோதரரின் மரணம் கொலை எனக் கூறி அந்தக் குற்றச்சாட்டை ராஜபக்ச மீது சுமத்துவதாகும்.

தாஜூடின் கொலை யோசிதவிடம் தொடங்கி இன்று எங்கு முடிவடைந்துள்ளது?பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரில் இன்று முடிவடைந்துள்ளது.

எனினும் பாருங்கள் பேராசிரியர் ஆனந்த சமரசேகரவே முதலில் பிரேத பரிசோதனை செய்து, சட்ட வைத்திய அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

அவர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஓர் சட்ட வைத்திய அதிகாரியாவார்.அவருடைய அறிக்கையைத்தானே பிழை எனக் கூறுகின்றார்கள்.

இந்த அறிக்கை பிழை எனக் கருதி நீதிமன்றம் மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்து பிரேத பரிசோதனை நடத்தியிருந்தது.

எனினும் இந்த அறிக்கை வெளியிடப்பட முன்னதாக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றிலும் ஊடகப் பேச்சாளர் ஒருவர் ஊடகத்திலும் சம்பவம் பற்றி விபரிக்கின்றார்கள்.

அப்படியானால் அவர்கள் எவ்வாறு அறிக்கையின் விபரங்கைள முன்கூட்டியே அறிந்து கொண்டார்கள்? எனது கேள்வி அதுவேயாகும்?அவ்வாறு என்றால் மறுபுறத்தில் நோக்கினால், ஆனந்த சமரசேகர இந்த அறிக்கை மட்டுமன்றில் பல அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.

இந்த அனைத்து அறிக்கைகளையும் சவால் விடுக்கப்பட முடியும் தானே, இந்தக் காலப்பகுதியில் சுகாதார அமைச்சராக தற்போதைய ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளருமான மைத்திரிபால சிறிசேன கடமையாற்றியிருந்தார்.

எனவே, எனக்கு தெரிந்த வகையில் இந்த விசாரணைகளின் பின்னணியில் அரசியல் சக்தியொன்று இருக்கின்றது என்பதனை நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.

இந்த விடயம் எதிர்காலத்தில் அம்பலமாகும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மீளவும் பிரதேப் பரிசோதனை நடத்தப்பட்ட போது முன்னதாக பிரேத பரிசோதனை நடத்திய சில உடற்பாகங்கள் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், வசீம் தாஜூடீன் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment