June 13, 2016

உற்சவத்திற்கு வருவதைப்போல இலங்கையிலிருந்து ஜெனிவா வரும் சில தமிழர்கள் – ச.வி.கிருபாகரன்!

(பிரான்ஸ் தமிழர் உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி.கிருபாகரன் அவர்கள் ஐரோப்பாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார்.
கடந்த 25வருடங்களுக்கு மேலாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவங்களை உடைய கிருபாகரன் இலங்கை தமிழர் விடயத்தில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் அண்மைக்கால நிலைப்பாடுகள் பற்றி  வழங்கிய விசேட செவ்வி )

கேள்வி :கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்பது மாதங்கள் கடந்துள்ளன. இதில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?

பதில்: எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் சர்வதேச சமூகத்திற்கு ஏதோ செய்கிறோம் என்பதை காட்டுவதற்காக சிறிலங்கா அரசாங்கம் தந்திரமான வேலைத்திட்டங்களை செய்து வருகிறது. சர்வதேசத்தை மதிக்கிறோம், மனித உரிமை விடயத்தில் நேர்மையாக நடக்கிறோம் என சிறிலங்கா அரசாங்கம் முன்னர் எப்படி மாயாசால வேலைகளில் ஈடுபட்டதோ அதையே இப்பொழுதும் செய்கிறது. மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் அவசர அவசரமாக சில நல்லிணக்க குழு அது இது என எதையோ செய்து வருகிறது.

கேள்வி: இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகளை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என ஐ.நா.மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டு விசாரணைதான் என உறுதியாக கூறியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் பிரதிபலிப்பு எவ்வாறு இருக்கும்?

பதில் :இங்கு உள்ள சிக்கல் என்ன என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவும் சர்வதேச விசாரணை இல்லை, வெளிநாட்டு நீதிபதிகள் இங்கு வரமுடியாது என கூறிய உடன் பிரேரணையை கொண்டு வந்த அமெரிக்கா நாட்டின் தூதுவர் ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கூறியிருக்கிறார். பிரித்தானியாவும் நம்பகத்தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என கூறியிருக்கிறது. ஆனால் சிங்கள இனவாதிகளை திருப்தி படுத்தும் வகையில் கடுமையான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறது. ஆகவே ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பெறுபேறுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் கடந்த காலங்களைப்போல சர்வதேசத்தை ஏமாற்றலாம் என சிறிலங்கா நினைத்தால் அது பாதகமாகவே முடியும்.

கேள்வி:இம்முறை ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பான விடயம் ஏதாவது சேர்க்கப்பட்டிருக்கிறதா?

பதில்: ஐ.நா.மனித உரிமைப்பேரவையின் 32ஆவது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பாக தனியாக நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவில்லை, தனியாக நேரம் ஒதுக்கப்படவும் இல்லை. ஆனால் சிறிலங்கா தொடர்பான விடயம் பேசப்படலாம். இக் கூட்டத்தொடரின் ஆரம்ப உரையின் போது ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் அல் ஹசைன் சுருக்கமாக இலங்கை விவகாரம் பற்றி குறிப்பிடலாம். அது தவிர அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்படும் நேரத்திலும் இலங்கை விவகாரம் பேசப்படலாம்.

கேள்வி: இம்மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாக இருக்கும் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இடைக்கால அறிக்கை ஒன்றை ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கை எவ்வாறு இருக்கும்?

பதில் :ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் 29ஆம் திகதி சமர்ப்பிக்க இருக்கும் வாய்மொழி மூல அறிக்கை தமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறிலங்கா அமைச்சர்கள் சிலர் தொடர்ச்சியாக ஜெனிவாவுக்கு வந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆiணாளரையும் அதிகாரிகளையும் இராஜதந்திரிகளையும் சந்தித்து வருகிறார்கள். புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பின் குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத்தின் பின் அடிக்கடி சிறிலங்கா அமைச்சர்கள் ஜெனிவா வருகிறார்கள்.

சந்திப்புக்கள் நடைபெறுகின்றன. சறிலங்கா அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என காட்டுவதற்காக இச்சந்திப்புக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் தமிழர் தரப்பின் பிரதிநிதிகள் என சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் யாரும் செப்டம்பருக்கு பின்னர் ஜெனிவாவுக்கு வந்து ஐ.நா.மனித உரிமை ஆணையாளரை சந்திக்கவில்லை.

எனவே சிறிலங்கா மேற்கொண்டு வரும் பிரசாரங்களும் வேலை த்திட்டங்களும் வெற்றி பெறுமா என்பதை ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமான பின்னர்தான் அறிந்து கொள்ள முடியும்.

கேள்வி: கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செயலிழந்த ஒன்றாக மாறிவிடும் என கூறப்படுகிறதே?

பதில்: என்னைப்பொறுத்தவரை ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு போதும் செயலிக்க மாட்டாது. ஆனால் இத்தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கொடுக்கப்பட்ட காலவரையறைகள் மனித உரிமை பேரவையினால் நீடிக்கப்படலாம்.

இறுதி அறிக்கை 34ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த இறுதி அறிக்கைக்கான காலக்கெடு கூட நீடிக்கப்படலாம். ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செயல் இழக்குமாக இருந்தால் முழு உலகமும் ஐ.நா.மனித உரிமை பேரவையை சந்தேகம் கொண்டு பார்க்க கூடிய நிலை ஏற்படும்.

கேள்வி:– ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் நல்லிணக்கம், காணாமல் போனோர் தொடர்பான சுயாதீன பணியகம், கலப்பு நீதிமன்றம் என மூன்று விடயங்கள் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்தது. கலப்பு நீதிமன்றத்தை அமைக்க முடியாது என சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக கூறிவிட்டது.

இதன் மூலம் ஐ.நா.மனித உரிமை பேரவையில் சிறிலங்கா அரசாங்கமும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கமே மீறியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர் என்ற ரீதியில் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் :இலங்கை தொடர்பாக மகிந்த ராசபக்ச அரசாங்க காலங்களில் பிரேரணைகள் ஐ.நா.மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட்ட போது அதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பை காட்டியிருந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் இணைஅனுசரணை வழங்கி துணை நின்றது. நடைமுறைப்படுத்த மாட்டோம் என அவர்களால் நிராகரிக்க முடியாது.

ஆனால் சில விடயங்களை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். கலப்பு நீதிமன்றத்தையோ அல்லது விசாரணைப்பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை இணைத்து கொள்வதற்கோ அவர்கள் இணங்க மறுக்கிறார்கள். வெளிநாட்டு நீதிபதிகள் இல்லையேல் நம்பத்தன்மையான விசாரணையோ நடுநிலையான தீர்ப்போ வராது என்பதை சர்வதேச நாடுகளுக்கு தெரியும். முக்கியமான பரிந்துரைகளை சிறிலங்கா நிறைவேற்றவில்லை என்றால் இந்த விடயத்தை ஐ.நா.மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகள் கையில் எடுக்க கூடிய நிலை காணப்படுகிறது.

அப்படியான ஓரு சந்தர்ப்பம் அடுத்த மார்ச் மாதம் 34ஆவது கூட்டத்தொடரின் பின்னர் தான் ஏற்படும். மார்ச் மாதத்தில் இலங்கையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சர்வதேச தேச நாடுகள் இலங்கை தொடர்பாக ஓரு தீர்மானத்திற்கு வருவார்கள் என மனித உரிமை செயற்பாட்டளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கேள்வி: நல்லிணக்கம் தொடர்பாக 11பேர் கொண்ட விசேட செயலணி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த செயலணி நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறதா?

பதில் :நிட்சயமாக இல்லை, சிறிலங்காவில் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட செயலணிகள் ஆணைக்குழுக்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் கடந்த கால அனுபவங்களின் ஊடாக அறியக் கூடியமாக இருக்கிறது. இந்த செயலணி ஓர அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அதை பெற்றுக்கொள்ளும் அரசு அதனை கிடப்பில் போட்டு விடும்.

இந்த செயலணியில் உள்ள அங்கத்தவர்களின் முன்னைய செயல்பாடு களையும் நாம் அறிவோம். அரசின் ஏமாற்று நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றியதால் தான் அவர்கள் சர்வதேசத்திடம் சென்றார்கள். நல்லிணக்கம் சமாதானம் அரசியல் தீர்வு என பல குழுக்களை நாம் கடந்த காலங்களில் கண்டிருக்கிறோம். அவர்கள் எதனை சாதித்தார்கள். காணாமல் போனோர் தொடர்பான சுயாதீன பணியகம் ஒன்றை அமைக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இது கூட அரசாங்கத்தின் ஏமாற்று வேலைதான். காணாமல் போனோர் தொடர்பாக சந்திரிக்கா அரசாங்க காலத்தில் கூட ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது விசாரணை அறிக்கை கூட ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது ஆனால் அதனால் எந்த பிரயோசமும் ஏற்படவில்லையே. தற்போதும் காணாமல் போனோர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன. இந்த ஆணைக்குழுக்களில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவை போன்ற ஒன்றுதான் தற்போதைய அரசாங்கம் அமைக்க இருக்கும் காணாமல் போனோர் தொடர்பான சுயாதீன பணியகமும் இருக்கும்.

கேள்வி :இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என முன்னைய காலங்களில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ஐ.நா.மனித உரிமை பேரவையில் எடுத்த நிலைப்பாடு இப்போது முற்றாக மாறி சிறிலங்கா அரசாங்கத்தை காப்பாற்றும் போக்கு காணப்படுவதாகவும் இதனால் எதிர்வரும் காலங்களில் தமிழர் விவகாரம் ஐ.நா.மனித உரிமை பேரவையில் பேசப்பட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. மனித உரிமை செயற்பாட்டில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் நீண்ட கால அனுபவம் கொண்ட நீங்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: புதிய அரசாங்கத்தின் மீது மேற்குலக நாடுகள் சற்று நம்பிக்கை வைத்து செயல்படுகின்றன என கூறப்பட்டாலும் பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இலங்கையில் மனித உரிமை விடயங்கள் முன்னேற்றம் காணவேண்டும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அக்கறையோடு செயற்படுகின்றன. அமெரிக்கா கூட இத்தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது .

மகிந்த அரச காலத்தில் அமெரிக்கா சில விடயங்களை வெளிப்படையாக பேசியது. ஆனால் தற்போது வெளிப்படையாக பேசாவிட்டாலும் சட்டம் நீதி என்ற வகையில் மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. இதேவேளையில் சிறிலங்காவின் பிரசாரத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.

கேள்வி :மகிந்த தலைமையிலான அரசாங்கத்தை மாற்றி தமக்கு சாதாகமான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காகத்தான் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை விவகாரத்தை அல்லது தமிழர் விவகாரத்தை கையில் எடுத்தன என்றும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு விட்டதால் இனிமேல் மேற்குலக நாடுகள் தமிழர் விவகாரத்தில் ஆர்வம் காட்டப்போவதில்லை என்றும் இலங்கை தமிழர் விவகாரம் சர்வதேச நாடுகள் மத்தியில் இனி பேசுபொருளாக இருக்காது என்றும் தமிழர் விவகாரம் இயற்கை மரணம் அடைந்த நிலைக்கு சென்று விடும் என்றும் கூறப்படுகிறதே?

பதில்: ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் நடந்த விடயங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் என்ற போராட்டத்தில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் மனித உரிமையை மதிக்கும் நாடுகளும் பின்வாங்கப்போவதில்லை.

கேள்வி: புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களிடையே உள்ள பலவீனமும் ஒற்றுமையீனமும் தான் சர்வதேச நாடுகள் ஈழத்தமிழர் விவகாரத்தில் அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: இக்குற்றச்சாட்டை ஓரளவு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி கோரும் ஐ.நா.வரை வருவதற்கு உலகம் முழுவதிலும் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் காரணமாகும். சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்ட இனப்படுகொலை போர்க்குற்றம் மனித உரிமை மீறல்களையும் அரசின் இனஅடக்குமுறையினால் தமிழர்கள் தமது உரிமைகளை இழந்தமை பற்றியும் தமிழர் அமைப்புக்கள் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் சர்வதேசத்தில் ஓரு தாக்கத்தை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. தற்போது தமிழர் அமைப்புக்களிடையே ஒற்றுமை இன்றி இருப்பது தமிழர் தரப்பிற்கு பலவீனமான விடயம் தான்.

ஆகவே புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள் பிரிந்து செயற்படாமல் ஒன்றுமையாக சர்வதேசத்தின் உதவியை நாட வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ் மக்களின் நிலைமைகள் நீண்டகாலத்திற்கு கவலைக்குரியதாகத்தான் இருக்கும்.


No comments:

Post a Comment