June 1, 2016

நெஞ்சின் ஆழத்துள் சொருகிய கொள்ளி -ச.ச.முத்து!

(சிங்களபேரினவாதிகளால் 1981.மேமாதம் 31ம் திகதி எரித்துசாம்பலாக்கப்பட்ட
யாழ்நூலகத்தின் நினைவாக…)
35ஆண்டுகள் ஆகின்றது ஆனாலும் இன்று சுட்ட தீ போல அதன் வடுவும் அதன்
வலியும் இன்னும் இன்றும் ஏதோ ஒரு வெறுமையை தருகின்றது..விடிந்தும் விடியாத ஒரு பொழுதில் வெகுதூரத்தில் மக்கள் கூடிகூடி நின்று பார்த்திருக்க எரிந்துபோன மிச்சங்களுடன் புகைந்துகொண்டிருந்த அந்த நூலகத்தின் தோற்றம் இன்றும் சுடுகிறது.
அன்றைப் பொழுது இப்போது நினைத்தாலும் அந்த நினைவுகளுக்குள் புத்தகங்கள் எரிந்த சாம்பல் மணம்தான் விசிறி அடிக்கின்றது.முழுத்தேசிய இனமும் விக்கித்துநின்ற அந்தநாளில்,எரிந்துமுடிந்து கரும்புகை பரவியபடி கிடந்த யாழ்நூலகத்தின் காட்சி சிங்கள பேரினவாதம் எமது இனத்துக்கு எதிராக இடையறாது நடாத்திவரும் அழிப்புகளுக்கு ஒருபெரும்சாட்சியாகும்.


நூலகம் என்பது வெறுமனே ஒரு கட்டிடம் என்பது அல்ல. ஒரு மக்கள் கூட்டத்தின் பாரம்பரியம், அறிவுதேடல், வாழ்வுமுறை எல்லாம் அந்த நூலகங்களின் கட்டிடங்களுக்குள் உயிரோட்டத்துடன் எப்போதும் அசைந்துகொண்டு இருக்கும்.

ஒரு சமூகத்தை ஒவ்வொரு தளத்தில்இருந்தும் அடுத்த தளத்துக்கு உந்தித்தள்ளும் வலிமைமிக்கவை இந்த வாசிகசாலைகள். மனிதனின் கண்டுபிடிப்புகளில் ‘மொழி’ என்பது எத்தனை அற்புதமானதோ, அதைப் போலவே மனிதன் அமைத்த அல்லது கட்டிய எல்லா கட்டடங்களைவிடவும் நூலகங்களே உயர்வானவை.

எந்தஒரு பிரதியுபகாரமும் கருதாது அறிவையும் ஆற்றளையும் அள்ளி வழங்கும் தாய்அன்புக்கு ஈடானவை நூலகங்கள். வெறுமனே ஒரு மாவட்டஅபிவிருத்திசபை தேர்தலின் வன்முறை என்ற குற்றச் செயலுக்குள் இந்த நூலக எரிப்பை நோக்க முடியாது.

தமிழ்மொழி பேசும் மக்கள் அனைவரதும் சுயமாக சிந்திக்கும் உரிமைமீதும், அறிவை தேடும் மானுட இயல்புமீதும் எறியப்பட்ட கொள்ளி என்றே நோக்கவேண்டும். ஆற்றல் உள்ள இனமாக மாறுவதற்கான வாய்ப்புகளை இல்லாது செய்துவிட்டால் தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்கலாம் என்ற முடிவுகளோடுதான் ஆக்கிரமிப்பாளர்கள் அறிவின் ஊற்றுக்கண்களை அடைப்பார்கள். இந்த முடிவோடுதான் சிங்களமும் தனது அமைச்சர்களையும் படைவெறிநாய்களையும் அனுப்பி மிகநுனுக்கமான திட்டமிடலுடன் ஒரு தேர்தல்பொழுதில் எங்களின் தேசியசொத்தை எரித்தழித்தார்கள்.


அந்தநாளின் மக்கள் உணர்வுகள் இன்னும் அலைகளாக மனமெங்கும் பரவிக் கிடக்கின்றது. காலகாலமாக குடிஇருந்தவீடு எரிந்து தணலாக கிடப்பதுபொல எட்டத்தில் இருந்தே மக்கள்பார்த்துக் கலங்கினர். தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்குப்பட்டு வெளிபடமுடியாமல் ஏதும்கூறத் தோன்றாமல் மௌனமாக ஒரு அறிவுக் கோயிலின் சாம்பல் கலந்துவந்த காற்றை சுவாச்சித்தபடி நின்றனர்.

இலங்கைத்தீவில் இரண்டு இனங்களும் சேர்ந்து வாழவே இனிமுடியாது என்று தமிழீழ தேசியஇனம் முடிவெடுத்த தருணங்களில் யாழ்நூலகம் எரிக்கப்பட்ட அந்த நாளும் ஒன்று.

இன்று அந்த இடத்தில் புதியநூலகம் அதைவிட அழகாக கட்டப்பட்டு இருக்கலாம். அதைவிட நவீனவசதியுடன் அது இயங்கலாம். ஆனால் அன்று அந்த மே31ம் நாள் 1981ம் ஆண்டில் எங்கள் மூளைக்குள் சொருகப்பட்ட தீக்கொள்ளி இன்னும் சுட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு சிங்கள பேரினவாதிகள் செய்த இந்த காட்டுமிராண்டித்தனம் தெரிந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் எரிப்பின் எச்சங்கள் எதுவும் இல்லாமல் துடைத்தெறிந்துவிட்டு புதிதாக கட்டிஎழுப்பி உள்ளார்கள்.

சுவர்களில் படிந்திருந்த கரியசாம்பலையும், எரியாமல் எஞ்சிக்கிடந்த கூரையையும், தீ தின்று துப்பிய புத்தகபக்கங்களையும், ஓலைச்சுவடிகளையும் அகற்றிவிட்டு புதியதாக கட்டடம் கட்டி அதற்கு வர்ணமும்பூசி எல்லாவற்றையும் மறைக்கலாம். ஆனால் ஒரு இனத்தின் நெஞ்சில் நெருப்பு சுட்ட அந்த வடு மாறாது.

யாழ்நூலக எரிப்பு என்பது ஒரு ஆயுதப்படை வன்முறை என்பதற்கு அப்பால் அதுதான் சிங்களத்தின் மனோபாவத்தின் அடையாளம். ஒரு தேசத்துக்குள்ளேயே அவர்கள் பெரும்பான்மையாகவும் நாங்கள் சிறுபான்மையாகவும் வாழும்வரை அந்த மனோபாவம் மாறவேமாறாது.


இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். எங்களின் தேசிய அறிவுச் சொத்தான நூலகத்தை எரித்த பொழுதில் எங்கும் கோபமும் சீற்றமுமே தமிழ் மனமெங்கும் நிறைந் திருந்தது. அதற்கு முன்னரே எழுந்துவிட்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீசிஎழச்செய்ததில் நூலகஎரிப்பும் ஒன்றுதான்.

பின்வந்தகாலத்தில் விடுதலைப் போராட்டம் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியுடன் சிங்களபடைகளுக்கு சமனான பலத்துடன் எழுந்துநின்றது. விடுதலைப் புலிகளால் சிங்கள தேசத்தின் எந்த மூலையிலும் தாக்குதல் நடாத்தக்கூடிய வலு இருந்தது. ஆனாலும் எந்த ஒரு சிங்கள நூலகத்தின் மீதும் வான்குண்டை வீசியும், உயிரம்பை ஏவியும் தீ மூட்டியும் பழிவாங்காமல் போராடிக்காட்டிய எங்கள் தேசப்புதல்வர்களின் அறம் விண்ணளவு உணர்ந்தது. அந்த அறம்தான் என்றாவது நின்று கொல்லும் சிங்களத்தை.

ச.ச.முத்து

No comments:

Post a Comment