May 29, 2016

கோத்தபாயவை காட்டிக்கொடுக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன! அனுர சேனநாயக்க!

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் விவகாரத்தில் தான் எந்தவொரு தவறும் இழைக்கவில்லை என்று அனுர சேனநாயக்க தெரிவித்துள்ளார்.


வசீம் தாஜுதீன் விவகாரம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தான் கைதுசெய்யப்பட முன்னர் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அனுர சேனநாயக்க,

வசீம் தாஜுதீன் விவகாரத்தில் நாங்கள் நேர்மையான விசாரணைகளை முன்னெடுத்திருந்தோம். அது கொலையாக இருக்கலாம் என்ற காரணத்தினாலேயே நாரஹேன்பிட்ட பொலிசின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியிடமிருந்து விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கைமாற்றினோம்.

இதை நானே முன்னின்று செய்திருந்தேன்.அத்துடன் வசீம் தாஜுதீன் உயிரிழந்த இடத்துக்கு நான் சென்றிருந்தது, அவரது தகப்பனாரை அழைத்து சொறி சொன்னது, எனக்கு மேலிடத்து உத்தரவு எல்லாம் கட்டுக்கதை.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இந்த விவகாரத்தில் மாட்டிவிடும் நோக்கில் புனையப்பட கதைகளாகும்.என்னை நெருக்கடிக்கு உள்ளாக்கி கோத்தபாய ராஜபக்ஷவை காட்டிக் கொடுக்க வைக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால் நான் எந்தவொரு கட்டத்திலும் அவ்வாறான துரோகத்தை செய்ய மாட்டேன்.வசீம் தாஜுதீன் விவகாரத்தில் தவறிழைத்திருப்பதாக கருதப்பட்டால் முதலில் சட்டமருத்துவ அதிகாரியைத் தான் கைது செய்ய வேண்டும்.

ஏனெனில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையைக் கொண்டுதான் குறித்த மரணம் விபத்து மரணம் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.நாங்கள் நேர்மையான முறையில் விசாரணைகளை நடத்தியிருந்தோம்.

குறித்த சம்பவம் கொலை என்று நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியங்கள் இருக்கவில்லை. தடயங்கள் இல்லாமல் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க பொலிசாருக்கு அதிகாரமில்லை.

அத்துடன் இவ்வாறான சம்பவங்களில் தடயங்கள் இருந்தாலும் நீதிமன்றமே முடிவுகளை அறிவிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன.

ஆனால் வசீம் தாஜுதீன் விவகாரம் விபத்து என்றே அனைத்து வழிகளிலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அந்த வகையில் என்னை நெருக்கடிக்குள்ளாக்கி கோத்தபாயவை மாட்டிவிடுவதற்காக புனையப்பட்ட வழக்காகவே இதனை கருதுகின்றேன்.

இந்த நெருக்கடிக்கு எல்லாம் நான் அச்சப்படவோ, அடிபணிந்து விடவோ மாட்டேன் என்றும் அனுர சேனநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment