May 29, 2016

அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மஹிந்த ஆதரவு நிலைப்பாட்டைக் கைவிடமாட்டேன்! முருத்தெட்டுவ ஆனந்த தேரர்!

அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மஹிந்தவுக்கு ஆதரவான தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.


பெவிதி ஹண்ட அமைப்பின் தலைவரும், அரச தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு அண்மைக்காலமாக மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக ஞாயிறு வார இதழ் ஒன்றுக்கு அவர் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவான செயற்பாடுகள் மற்றும் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ளும் செயற்பாடுகள் காரணமாகவே எனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றது.

தொலைபேசி வழியாக நான்கைந்து தடவைகள் மற்றும் அநாமதேய கடிதங்கள் வாயிலாகவும் குறித்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை.

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இதனை விட பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட அனுபவம் எனக்குண்டு. எனவே இதையெல்லாம் காற்றில் அள்ளுண்டு போகும் தூசுகளாகவே நான் பார்க்கின்றேன்.

எனவே எந்தவொரு கட்டத்திலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையோ, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளையோ இடைநிறுத்த மாட்டேன் என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கை ஒருங்கிணைப்பு மையமாக செயற்படும் நாராஹேன்பிட்டி அபயாராம விகாரையின் விகாராதிபதி ஆனந்த தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment