May 19, 2016

யாழில் ஊடக நிறுவனத்திற்குள் புலனாய்வாளர்கள்!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை நிறுவனம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவரை பத்திரிக்கை நிறுவனத்தின் ஊழியர்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழில் உள்ள பத்திரிகை நிறுவனத்தினுள் இன்று (புதன்கிழமை) காலை முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டன. இதன்போது அத்துமீறி நிறுவனத்தினுள் நுழைந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.
இதனை அவதானித்த குறித்த பத்திரிகை நிறுவனத்தின் ஊழியர்கள், இருவரையும் விசாரித்துள்ளனர். இதன்போது தாம் பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறிய அவர்கள், அங்கிருந்து தப்பி செல்ல முனைந்துள்ளனர்.
அதனையடுத்து புலனாய்வாளர்களை மடக்கிப் பிடித்த ஊழியர்கள் அவர்களை பத்திரிகை நிறுவனத்தினுள் தடுத்து வைத்திருந்து யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலையடுத்து அங்கு வந்த பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் இருவரையும் கையளித்ததுடன் தமது நிறுவனத்தினுள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தமை குறித்து அவர்கள் மீது முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment