தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோர்களின் வணக்க நிகழ்வு மேற்கூறிய நகரங்களில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
தாயக விடுதலைக்காக , உண்ணாநோன்பிருந்து போராடி சாவைத் தழுவிக்
கொண்ட தியாகதீபம் திலீபன் மற்றும் வான்புலிகளின் தளபதி சங்கர் ஆகியோரது நினைவு நிகழ்வு 26.09.2015 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சுடர்வணக்கம் , மலர் மற்றும் அகவணக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், இசைவணக்கம் அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களினதும், கேணல் சங்கர் அவர்களினதும் வீரத்தைப் போற்றி, விடுதலைப் பாடல்களுக்கான நடனம் நடைபெற்றது. மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற நடன நிகழ்வுகள் மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்தன.
1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான்.
உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனிஇடம் பெற்று விட்டான். உயிர் துறந்த பின்னும் கூட மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்ததும் தனது உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்னறிலில் திரண்டடிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி விடுதலைப்புலிகளினால் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. தமது இறுதி அஞ்சலியை செலுத்தக் கூடியிருந்த மக்களில் பலர் துன்பம் தாழாது மயங்கி விழுந்தனர் சோக ஒலி தமிழீழம் எங்கும் எதிரொலித்தது.
எமது மண்ணில் அமைதியை நிலைநாட்ட என்று உட்புகுந்த இந்திய இராணுவத்தை எதிர்த்துநின்ற திலீபன் அவர்கள் தனது மக்களுக்காக , தனது மண்ணிற்காக உயர்ந்த ஒரு பணியைச் செய்து சென்றார். எமது விடுதலைக்காக விண்ணையும் சாடி நின்ற வான்புலிகளைக் கட்டி எழுப்ப, சிறந்த அத்திவாரமிட்ட கேணல் சங்கர் அவர்கள் மாபெரும் சாதனைகளுக்கு வித்தாகி நின்றார்.
இவர்களது நினைவோடு இனிவரும் சந்ததி வலுவாகப் போராடவேண்டும் என்ற சிற்றுரையோடு , நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற எழுச்சிப் பாடல் ஒலிக்க, தாரக மந்திரம் முழங்கியபடி நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
Landau
Nürnberg



































No comments:
Post a Comment