September 3, 2014

இந்தியாவை நாங்கள் எதிரிகளாகப் பார்கவில்லை; ஆனால் தமிழர்களின் நலன்கள் என்று வரும்போது பேரம்பேசும் சக்தியாக தமிழர்கள் இருக்கவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

இன்று (03.09.2014) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கேட்கப்பட்ட
கேள்விகளும் அவற்றுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பதில்களும் வருமாறு..

கேள்வி: தமிழ் தேசிய நாடாளுமன்றக்குழு டில்லி சென்று வந்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இணையத்தளம் ஒன்று வழங்கிய செவ்வியில் புலம்பெயர் தமிழ்மக்கள் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடவேண்டும். மோடி அவ்வாறு தன்னிடம் கூறிவிட்டதாகவும்கூறிய கருத்துத் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது?

பதில்: திரு.சம்பந்தன் ஐயா மட்டும் அல்ல, பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்த கூட்டமைப்பின் குழுவில் உள்ளடங்கிய வேறு நபர்களும் பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக பிரதமர் மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தோடு நூற்றுக்கு நூறு வீதம் ஒத்துப்போவதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்கு மேலதிகமாக திரு.சம்பந்தன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்கள் சம்மந்தமாக நீங்கள் கூறிய கருத்தையும் கூறியிருக்கின்றார்.

பிரதமர் மோடி கூட்டமைப்பின் கருத்தோடு நூற்றுக்கு நூறு வீதம் ஒத்துப்போகின்றார் என்ற செய்தியில் நாம் ஆச்சரியப்பட வேண்டிய தேவை ஒன்றும் இல்லை. காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியுடெல்லியின் விருப்பத்திற்கு ஏற்பதான் அவர்களின் அத்தனை செயற்பாடுகளும், கருத்துக்ளும் அமைந்திருக்கின்றன. அதனுடைய இன்னொடு வெளிப்பாடுதான் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை முடக்குகின்ற நோக்கோடு கருத்துக்கள் தெரிவிக்கின்றன.

நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு முக்கிய காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு என்று ஒரு நிகழ்ச்சி நிரலை வைக்காது, வெறுமனவே நியுடெல்லி கூறுகின்ற கருத்துக்களுக்கு இணங்கி, கேள்விகள் எதுவும் எழுப்பாமல் செயற்படுவது.

எம்மைப் பொறுத்தவரையில், இந்திய மத்திய அரசோடு முரண்பட்டு அவர்களை எதிரிகளாகப் பார்க்கக் கூடாது. அதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். அதே சமயம் எங்களின் (தமிழர்களின்) நலன்களில் இருந்துகொண்டுதான் யாருடனும் அணுக வேண்டும் அல்லது யாருடனும் பேரம் பேச வேண்டும். ஏனையவர்களின் கருத்துக்களுக்கு இணங்கிச் செயற்படுவது அவர்களின் நலன்கள் தான் பூர்த்தி செய்யபடுமே தவிர எங்களின் நலன்கள் பூர்த்தி அடையப்போவதில்லை.

எங்களைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஜயம் முக்கிய விஜயமாக அமைந்திருக்கலாம். உண்மையில் தமிழ்மக்களுக்கு நன்மை கொடுக்கக்கூடிய வகையில் அந்த விஜயம் பாவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அப்படி இல்லாமல் வெறுமனவே இந்தியா விரும்பினதை ஏற்று, இந்தியாவின் விருப்பத்தை ஏற்று, அதை தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற வேலைத் திட்டத்தை கூட்டமைப்பு நடந்துகொள்வதுதான் மிகவும் துர்ரதிஸ்டமான விடயமாக அமைந்திருக்கிறது மட்டுமல்ல கடுமையான ஒரு ஏமாற்றத்தையும் அளித்திருக்கிறது. இந்த உண்மையின் உரிய விளைவுகள் எதிர்காலத்தில் எம்முடைய மக்கள் நன்கு அறிவார்கள்.

கேள்வி: இரா.சந்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினருடன் நடத்திய பேச்சின்போது, அரச தரப்பைச் சார்ந்த கட்சிகள் தவிர்ந்த வெளியே இருக்கின்ற தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து, அரசியல் தீர்வுக்கான பொதுவான முன்மொழிவை வைக்குமாறு புதுடில்லிப் பயணத்தின் போது தமிழ்க் கூட்டமைப்புக்குக் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - தமிழ்த் தேசிய மக்க்ள முன்னணி ஆகியன பொது இணக்கப்பாட்டின் கீழ் செயற்படுவதற்கான முன் முயற்சி ஏதும் புதுடில்லியின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளதா?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த பலர் நீண்ட காலமாக எங்களுடைய பல கட்சி உறுப்பினர்களை அணுகியிருக்கிறார்கள். குறிப்பாக நாங்கள் ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நாங்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றோம். ஒன்றுபடுவதால் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் வரப்போவதில்லை. ஆனால் கொள்கை ரீதியாக நாங்கள் இணங்கலாம் என்றால் நீங்கள் கேட்கத் தேவையில்லை நாங்களே வந்து இணைவோம். அல்லது நீங்களே எங்களுடன் வந்து இணையலாம் என்று. நாங்கள் கொள்கை விடயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். அதுதான் நாங்கள் பிரிந்தமைக்குக் காரணம். அதில் ஒரு இணக்கப்பாடு இல்லாமல் இதைப்பற்றிப் பேசிப் பிரயோசனம் இல்லை என்ற கருத்தைத் தெரிவித்தபோது, அவர்கள் ஒவ்வொருவரும் கொள்கையை விட்டு விட்டு வாருங்கள் என்றுதான் இதுவரைக்கு கூறியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நிலையில் இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் எந்தவித கருத்துக்களையும் கூறியிருப்பதாக நாங்கள் இதுவரை அறியவில்லை. அப்படி இருந்தாலும்கூட நாங்கள் கொள்கை விடயத்தில் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.

கூட்டபைப்பு தொடர்பில் இன்னொரு விடயத்தை முன்வைக் வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வேறு தரப்பினரும் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள். ஐ.நா விசாரணை தொடர்பிலான எந்தவொரு கருத்தையும் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை. இந்தியத் தரப்பும் அதுதொடர்பி;ல் எதுவும் தெரிவிக்கவில்லை.

பின்னணி என்னவென்றால் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்த பொழுது இந்தியா அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தரவில்லை. அத்தீர்மானத்தை எதிர்க்காமல் இருந்து மிகப்பெரிய தவறு என மோடி அரசாங்கம் கூறுகிறது. குறிப்பாக இலங்கைத் தீவில் நீதி விசாரணையை கொண்டுவருதற்கான தீர்மானத்தை வெறுமனவே கலந்கொள்ளாது அதனை முழுமையாக எதிர்த்திருக்க வேண்டும் என்ற கருத்தை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இன்றைக்கு ஒக்டோபர் 30ஆம் திகதி வரைக்கும் எமது மக்கள் சாட்சியம் அளிக்கும் காலத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்தவொரு காலப்பகுதியில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விஜயமும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது. தமிழனைப் பொறுத்தவரையில் இந்த விசாரணை முக்கியமானதாக அமைந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில் விசாரணையை எதிர்க்கின்ற ஒரு நாடாக இந்தியா இருக்கின்ற போது, ஒரு பிரதமரைச் சந்திக்கின்ற நிலையில் இந்தியாவின் அந்தநிலைப்பாடு தொடர்பில் எந்தவொரு வார்த்தையையும் பேசாது இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைபின் உண்மையான நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. கூட்டமைப்பு நியூடெல்லியின் எடுபிடியாக மட்டுமே செயற்படுகிறதே தவிர தமிழ் மக்களின் நலன்களை மையப்படுத்தி எந்தவொரு செயற்பாடுகளையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை.

கேள்வி :- ஐ.நா.விசாரணைக்கு மக்கள் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து இப்போது அறிவித்திருக்கின்றீர்கள். இதற்கான பாதுகாப்புச் சூழல் மக்களுக்கு இருக்கின்றதா?

பதில் :- நாங்களே அரசினால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். எனவே, நாங்கள் எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதத்தையும் மக்களுக்கு வழங்கமுடியாது. ஆனால் பயம் என்ற விடயத்துக்கு அப்பால், இன்று சர்வதேச சமூகத்தின் பார்வை இலங்கையை நோக்கி இருக்கின்றது. ஐ.நா. விசாரணை விவகாரம் சர்வதேச ரீதியில் பெருமளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. அத்தகைய சூழலில் ஸ்ரீலங்கா அரசின் ஒவ்வொரு செயற்பாடும் மிக நுணுக்கமாக அந்த நாடுகளால் அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. பயம் என்பதற்கு அப்பால் எங்களுக்கும் ஒரு கடமை இருப்பதை நாம் மறந்துவிட முடியாது. நடந்த அநியாயங்களுக்கு நீதி கிடைப்பதன் ஊடாகவும், நடந்த அநியாயங்களை சரியான வழியில் நிரூபிப்பதன் வாயிலாகவும் அரசியல் ரீதியாக ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. எனவே, நாங்கள் தொடர்ந்தும், பயந்து ஒடுங்கி, அடக்கப்பட்டு வாழ்ந்து வரும் வாழ்க்கையிலிருந்து விடுபடுவதும் கூட, இந்தப் பணியில் நாம் செயற்பட்டு, முழுமையான சாட்சியங்களை வழங்கி, அதனை நிரூபிக்கும் விடயத்தில்தான் தங்கியும் உள்ளது. அடுத்தது, ஒரு சிலர் மட்டுமே இந்தப் பணியில் ஈடுபடுவார்களானால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். அவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பதும் சுலபமாகிவிடும். அதற்கு மாறாக ஒட்டு மொத்தமாகத் தமிழினமே அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவருமே, லட்சக்கணக்கில் ஒன்றிணைந்து இதில் ஈடுபட முன்வருவார்களானால், ஓர் அரசுக்கு அவர்கள் அனைவருக்கும் எதிராகச் செயற்பட முடியாது. பல நாடுகளில் அரசுக்கு எதிரான புரட்சிகள் வெற்றி பெற்றமைக்கு ஒட்டு மொத்த மக்கள் கூட்டமே கொந்தளித்து எழுந்தமைதான் பிரதான காரணமாக அமைந்தது. அது போன்றதுதான் இதுவும். ஆனால் நாங்கள் புரட்சி பற்றிப் பேசவில்லை. சர்வதேச சமூகத்தால் சட்ட ரீதியாக அறிவிக்கப்பட்ட - சர்வதேச சமூகத்தால் நியாயமானதாக எதிர்பார்க்கப்படுகின்ற - சர்வதேச சமூகம் நுணுக்கமாக பார்த்துக் கொண்டிருக்கின்ற சூழலில் - அந்த நீதியான நடவடிக்கையை ஒன்றுபட்டு முன்னெடுக்கும்படிதான் நாம் கோருகின்றோம். நாம் ஒன்று திரண்டு இதில் ஈடுபட்டால் எங்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக அரசினால் நடவடிக்கை எடுக்கமுடியாது. இதுவிடயத்தில் எங்களின் முழு ஒத்துழைப்புதான் எங்களுக்கான பாதுகாப்புக் கவசமாக அமைய முடியும்.

No comments:

Post a Comment