July 25, 2014

சுவிஸில் எழுச்சியாக நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜூலை!

இலங்கை அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலையின் 31ம் ஆண்டு நினைவு நிகழ்வானது, பேர்ண் பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள Helvetiaplatz எனும் இடத்தில் நினைவு கூரப்பட்டது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கனத்த நினைவுகளுடனும், மாறா வடுக்களுடனும் கலந்து கொண்டிருந்தனர்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட இக்கவனயீர்ப்புப் போராட்டமானது,
பொதுச் சுடரேற்றலுடன், ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
சமகால அரசியல் தொடர்பான உரையுடன், கறுப்பு ஜூலை விட்டுச் சென்ற வடுக்களும் மீண்டுமொருமறை நினைவுகூரப்பட்டது. இளையோர்களால் வேற்றின மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஜேர்மன் மொழியில் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததுடன் இன அழிப்பு சார்ந்த துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
கவனயீர்ப்பு நிகழ்வின் ஓர் அங்கமாக, இலங்கை அரசின் திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்த பதாதைகளுடன், புகைப்படங்களும் வைக்கப்பட்டு நடன அசைவுகள் மூலம் அக்கினிப் பறவைகள் இளையோர்களுடன் தமிழ் இன உணர்வாளர்களும் இணைந்து பேர்ண் நகரத்தில் மக்கள் செறிந்து வாழும் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து இடங்களில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வானது வேற்றின மக்கள் பலரையும் வெகுவாக ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment