August 18, 2016

தற்காலிகமாக கைவிடப்பட்ட பரவிப்பாஞ்சான் இராணுவத்திற்கு எதிரான போராட்டம்!

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொண்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.


பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சியுடன் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாகவும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில், இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எனினும் இரண்டு வாரங்களிற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடரப் போவதாகவும் மக்கள் எச்சரித்துள்ளனர்.

கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக இரவு பகலாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்னால் கடந்த சனிக்கிழமை காலை முதல் ஒன்றுகூடிய மக்கள், இன்றுவரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டவா்களை புகைப்படம் எடுப்பதற்காகச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, குறித்த ஊடகவியாளர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்தனர்.

தமது காணிகளை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று புதன்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டார்.

பரவிப்பாஞ்சானில் இராணுவம் கையகப்படுத்தி வைத்திருந்த காணிகளில் ஒரு பகுதி கடந்த மே மாதம் 10 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட போதிலும் 54 குடும்பங்களுக்கு சொந்தமான 180 ஏக்கர் காணிகள் தொடர்ந்தும் இராணுவத்தினர் வசம் காணப்படுகின்றன.

இதனையடுத்து காணி உரிமையாளர்களில் 20 குடும்பங்கள் தமது காணிகளையும் விடுவிக்குமாறு கோரி கடந்த யூன் மாதம் 28 ஆம் திகதி பரவிப்பாஞ்சான் முகாம் இராணுவத்தினரிடம் கடிதமொன்றை கையளித்திருந்தனர்.

இதற்கான பதில் வழங்கப்படாததை அடுத்து கடந்த யூலை மாதம் மீண்டும் இராணுவத்தினரைச் சந்தித்த மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

எனினும் பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகளை தாம் விடுவிக்க முடியாது எனவும் அரசாங்கமே இது தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராணுவத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த யூலை மாதம் தொடர் உண்ணாவிரத போராட்டமொன்றையும் முன்னெடுத்த நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரின் வாக்குறுதியைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் கடந்த ஜூலை மாதம் மாவட்ட செயலகத்திற்கு சென்ற மக்கள் அரச அதிபரிடம் மனுவொன்றை கையளித்தனர்.

இந்த நிலையில் காணிகளை விடுவிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் உறுதியளித்திருந்த போதிலும் இதுவரை பரவிப்பாஞ்சான் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment