August 18, 2016

ஈழ தாகம் கொல்லும் விஷ ஊசிகள்! முடமாகும் இனம்!

ஈழத்தில் இருந்து இழவுச் செய்தி வந்திருக்கிறது. வேறு என்ன செய்தி வரும்?
அகதி முகாம்களில் இருந்தும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்படும் முன்னாள் போராளிகள், இனம் காணமுடியாத நோய் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கொடூரமான செய்தி.இப்படி 103 பேர் இதுவரை இறந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை, இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்... இந்த மர்மச்சாவுகளின் மர்மம் என்ன?

முன்னாள் போராளிகளின் சாவு குறித்து சர்வதேச நாடுகளின் நடவடிக்கையும் விசாரணையும் தேவை என, இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிவிப்பு விஷச் செய்தியாக வந்து விழுகிறது.

இப்போது உயிருடன் இருக்கும் அனைத்து முன்னாள் போராளிகளையும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன் சொல்லி, அதிர்ச்சியை அதிகப்படுத்துகிறார்.

இலங்கையின் நாடாளுமன்றத்தில் இப்போதைய எம்.பி-யான சிவஞானம்ஸ்ரீ தான் இந்தப் பிரச்னையைக் கிளப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ருவான் விஜயவர்த்தனா, `இந்தப் பிரச்னைக்கு எந்தவித முக்கியத்துவமும் அளிக்க முடியாது' என அலட்சியமாகப் பதில் அளித்தார்.

இன்னொரு எம்.பி-யான சிவசக்தி ஆனந்தன், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசும்போது, பட்டவர்த்தனமாக, இரக்கமற்றப் படுகொலையை உடைத்துச் சொல்லி விடுகிறார்.

தடுத்து வைக்கப்பட்ட புனர்வாழ்வு முகாம்களில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இருந்தார்கள். இவர்களில் பலர், திடீர் திடீரென தொற்றாத நோய்களால் இறக்கிறார்கள். இவர்கள் கைது செய்யப்பட்டபோது போடப்பட்ட ஊசியில், நச்சு இரசாயனம் கலக்கப்பட்டிருந்ததோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அதனால்தான் இவர்கள் திடீர் திடீரென நோய் பாதிப்பில் இறக்கிறார்கள்'.

இதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன `அனைத்து முன்னாள் போராளிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்த தயார் என அறிவித்திருக்கிறார்.
புனர்வாழ்வு முகாமில் விஷ ஊசி போடப்பட்டதாகவும், உணவில் விஷம் கலக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், மட்டக்களப்பு எம்.பி சீனித்தம்பி யோகேஸ்வரன்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் ரணில், அதிபர் சிறீசேன ஆகிய இருவரும் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இவர்களை ஆதரிக்கும் முன்னாள் அதிபர் சந்திரிகா, `யுத்தத்தின்போது நடந்த குற்றங்களுக்கு விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்' எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்ல வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது.

ஆனந்த ராஜா என்கிற இளைஞரின் கடிதம் ஒன்றை, ‘கதிரவன்’ என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. `நான் அநுராதபுரம் சிறையில் இருந்த போது, எனக்கு ஓர் ஊசி போட்டார்கள். அதில் இருந்தே எனது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு விட்டன' என அந்தக் கடிதத்தில் கூறிப் பதற வைக்கிறார்.

புனர்வாழ்வு மையத்துக்கு நான் வந்தபோது நன்றாகத்தான் இருந்தேன். அங்கே எனக்கு ஓர் ஊசி போட்டார்கள். சில நாட்களிலேயே எனது ஒரு கால் செயல் இழந்து முடமாகிப்போனேன்' எனச் சொல்லியிருக்கிறார் இன்னொரு போராளி.
காணாமல்போனவர்களைத் தேடுவதற்கான 17 பேர் கொண்ட விசாரணை ஆணையம், சமீபத்தில் தனது விசாரணையைத் தொடங்கியது.

தனது மகன், கணவன், அப்பா இருக்கிறாரா... இறந்தாரா என்பது இதுவரை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் குடும்பங்கள், அந்த விசாரணை ஆணையத்தில் வந்து புகார் கொடுத்துச் செல்கின்றன.

அப்படி ஒரு புகார் கொடுக்க வந்த எஸ்.என்.தேவன் என்பவர் சொன்ன செய்திகள், அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கின.

2009-ம் ஆண்டு மே மாதம், இராணுவத்தினரிடம் நான் சரண் அடைந்தேன். மூன்று மாதங்கள் ஒரு முகாமில் வைத்திருந்தார்கள். அதன் பிறகு வேறு ஒரு முகாமுக்கு மாற்றினார்கள். அந்த முகாமில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் `தடுப்பூசி' எனச் சொல்லி ஓர் ஊசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தினார்கள். அந்த ஊசி போட்டதும் பலருக்கு மயக்கம் வந்துவிட்டது. மயங்கி விழுந்தவர்களை எல்லாம் ஆம்புலன்ஸில் கொண்டு போனார்கள்.‘எதுக்காக இந்த ஊசி போடுறீங்க?’ எனக் கேட்டபோது ‘பறவைக்காய்ச்சல் பரவுது அதுக்காகத்தான்' எனச் சொன்னார்கள்.

இன்னொரு மிலிட்டரி ஆபீஸர் `அவங்க எல்லாருக்கும் எய்ட்ஸ் இருக்கு. அதனாலதான் போடுறாங்க’ என்றார். ‘இத்தனை பேருக்கா எய்ட்ஸ் இருக்கு?!’ என்றோம்.

இந்த ஊசி போட்டுக்கிட்ட எல்லோருக்குமே, சில நாட்களில் உடல் சோர்வு வந்தது, உடல் நடுக்கம் ஏற்பட்டது. சிலருக்கு பார்வை மங்கிவிட்டது.

இந்த ஊசியைப் போட்டுக்க மாட்டோம்னு சொன்னவங்க எல்லாருக்கும் அடி விழுந்தது. அடிச்சுக் கட்டாயப்படுத்தி ஊசியைப் போட்டாங்க. அந்த ஊசியில் ஏதோ இரசாயனம் கலந்திருக்குமோனு சந்தேகமா இருக்கு.

எங்களுக்குக் கொடுத்த சாப்பாட்டிலும் அது மாதிரி ஏதாவது கலந்திருக்கலாம்னு சந்தேகமா இருக்கு. எங்களுக்கு எங்க சொந்தக்காரங்க கொண்டுவந்து கொடுக்கிற சாப்பாட்டைப் பிடுங்கித் திங்கிற மிலிட்டரிக்காரங்க, முகாமில் கொடுக்கிற சாப்பாட்டை ஒரு நாள்கூட வாங்கிச் சாப்பிட்டதே இல்லை.

முகாமில் இருந்து வெளியேறின எல்லாருமே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்படுறதுக்கு அந்தச் சாப்பாடுதான் காரணம். சாப்பாட்டுல ஏதோ கலந்திருக்காங்க' என்று எஸ்.என்.தேவன் சொல்லியிருக்கிறார்.

பாதிப்பேரை மொத்தமாகக் கொன்றும், மீதிப்பேரை சிறுகச்சிறுகக் கொல்லும் சிங்கள இனப் பயங்கரவாதத்தின் கோரப்பசி இன்னமும் அடங்கவில்லை.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி, சிறையில் இருந்து வெளியே வந்த மூன்றே ஆண்டுகளில் இறந்துபோனார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

அதேபோல் சசிகுமார் ராகுலன், தம்பிராஜா சரசுவதி ஆகியோரின் திடீர் மறைவும் ஈழத் தமிழர்களின் மத்தியில் அதிர்ச்சியை விதைத்துள்ளது. இவை எல்லாம் இயற்கை மரணங்கள் இல்லை என்பதுதான் வெளிவரும் உண்மை.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனப் பெயர் சூட்டி, ஓர் இனத்தையே கருவறுப்பதுதான் சிங்களத்தின் திட்டம்.
உலகம் எந்த ஆயுதங்களை எல்லாம் தடைசெய்து வைத்திருந்ததோ, அதை எல்லாம் பயன்படுத்தி தமிழர்களை அழித்தார்கள். இரசாயனக் குண்டுகளை வீசினார்கள். செத்து விழுந்தவரின் உடல்கள் அனைத்தும் கருகின.

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசினார்கள்.கொத்துக் குண்டுகளை மொத்த மொத்தமாக வீசினார்கள். போர்க்காலங்களில் மருத்துவமனைகள், மத வழிபாட்டுத்தலங்கள், பள்ளிக்கூடங்களில் குண்டு வீசக் கூடாது. ஆனால், அவை மீதுதான் குண்டுகளை வீசினார்கள்.

போர்க்காலங்களில் ‘பாதுகாப்பு வளையங்கள் உருவாக்கி, அங்கு இருக்கும் மக்களைப் பாதுகாப்பார்கள். உலகத்தில் எங்கும் நடக்காத வகையில் பாதுகாப்பு வளையங்களின் மீதே குண்டுகளை வீசியது சிங்களப் பயங்கரவாதம்.

வானத்தில் வெடித்து தரையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் குண்டுகளை, பொதுமக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் பயன்படுத்தக் கூடாது' என்பது ஜெனிவா விதிகளில் ஒன்று. இந்த விதியைப் பின்பற்றவே இல்லை.

கொலை, முழுமையாக அழித்தல், அடிமைப்படுத்துதல், நாடு கடத்தல், சிறைப்பிடித்தல், உளவியல் துன்புறுத்தல், பாலியல் வன்புணர்வு, காணாமல்போகச் செய்தல், இன அடையாளங்களை அழித்தல் ஆகிய அனைத்துப் போர்க்குற்றகளும் போர் நடந்த காலத்தில் மட்டும் அல்ல, போர் முடிந்த பிறகும் விடுதலைப்புலிகள் இயக்கமே அழிக்கப்பட்டுவிட்டன என மார்தட்டிக்கொள்ளும் நிகழ்வு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் நடக்கிறது.

ராஜபக்‌சவைக் `கொடூரன் எனச் சொல்லி வீழ்த்திவிட்டு வந்த சிறீசேன – ரணில் கூட்டணி ஆட்சிக் காலத்திலும் நிலைமை மாறவில்லை.

காணாமல்போனவர்களைக் கண்டுபிடித்துத் தாருங்கள் எனக் கோரிக்கை வைக்கும்போது இலங்கைப் பிரதமர் ரணில் சொல்கிறார், `காணாமல்போனவர்கள் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை!'

ஜெயவர்த்தன, சந்திரிகா, ராஜபக்‌ச, ரணில், சிறீசேன ஆகியோருக்குள் எந்த வித்தியாசமும் இல்லை.

ஸ்ரீலங்கா, தேசியக் கட்சியோ சுதந்திரக் கட்சியோ இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. ஆண்-பெண் வித்தியாசம் இல்லை. சிங்கள இனவாதம் எல்லோர் இரத்தத்திலும் ஓடுகிறது.

இவர்களுக்கு செல்வாவும் ஒன்றுதான், அமிர்தலிங்கமும் ஒன்றுதான், பிரபாகரனும் ஒன்றுதான், திலீபனும் ஒன்றுதான், போராடும் தமிழனும் ஒன்றுதான், போராடாத தமிழனும் ஒன்றுதான். தமிழன், தமிழ் அடையாளம் இவற்றை அழித்தாக வேண்டும்.

2006-ம் ஆண்டில், எத்தனை ஆயிரம் குடும்பம் இருந்தன... எத்தனை லட்சம் மக்கள் இருந்தார்கள்? இப்போது எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? தமிழர்களின் மரபுவழித் தாயகமாக முதலில் எத்தனை ஆயிரம் சதுர கிலோமீட்டர் இருந்தது. இப்போது எவ்வளவு இருக்கிறது? வடகிழக்கு மாகாணத்தில் 2006-ம் ஆண்டுக்கு முன்னாள் இருந்த சிங்களவர் எண்ணிக்கை என்ன? இப்போதைய எண்ணிக்கை என்ன? இந்த மூன்று கேள்விகளுக்குத்தான் ‘இனப்படுகொலை' என்பதன் விடை இருக்கிறது.

சிங்கள பௌத்த தேசியவாதம் 1948-ம் ஆண்டு முதல் தலைதூக்கிய கதையை, ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையை விரிவாகச் சொல்லிவிட்டது.

இப்போது தமிழர் பகுதிகள் எங்கும் புத்தர் சிலைகள் புதிதாக முளைக்கின்றன. இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இராணுவ முகாம் இருந்தது. இப்போது அந்த இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுவிட்டது.

இதற்கு அகில இலங்கை இந்து மாமன்றம் கடுமையான எதிர்ப்பைக் காட்டியுள்ளது. ‘இந்து சாமி சிலைக்கு அருகில் புத்தர் சிலை வைப்பது பௌத்த மதத்துக்கு விரோதமானது' என, பௌத்த குருமார்கள் எதிர்க்கிறார்கள்.

அதைப் பற்றி அரசு கவலைப்படவில்லை.யாழ்ப்பாணத்தில் 80 அடி உயர புத்தர் சிலை நிறுவப்பட்டுவிட்டது.

இராணுவ முகாமுக்காக எடுக்கப்பட்ட தமிழர் நிலங்கள், திருப்பித் தரப்படவில்லை.

போர் வெற்றிக்காகப் பாடுபட்ட சிங்கள இராணுவ வீரர்களுக்குப் பரிசாக, தமிழர் பகுதியில் இருக்கும் நிலங்கள் தாரைவார்க்கப்படுகின்றன.

ஓர் இனத்தின் மீது, விஷ ஊசி பாய்ச்சப்பட்டு விட்டது. இரசாயனச் சோற்றை ஓர் இனமே தின்று கொண்டிருக்கிறது.

இது ‘மகிழ்ச்சி’க் காலமா... கருமமா..?

No comments:

Post a Comment