July 6, 2016

மார்கிரட் தட்சரின் பின் பிரித்தானியாவின் தலைமையை ஏற்கும் பெண்மணியாக வருவாரா தெரெசா மே?

பிரித்தானியாவின்  ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு நடக்கும் தேர்தலின் முதல் சுற்றில், உள்துறை அமைச்சர் தெரெசா மே, தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளார்.



ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவாக கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் அமைந்தது. இதனை அடுத்து, பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகவுள்ள நிலையில், புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது.


கன்சர்வேடிவ் கட்சியின்  ஒட்டுமொத்த  ஆதரவையும் பெறுபவராக தான் மட்டுமே இருப்பதை இந்தத் தேர்தல் முடிவு காட்டுவதாக தெரெசா மே  தெரிவித்துள்ளார்.


பிரித்தானியா  தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருக்க வேண்டும் என்ற நிலைப்பட்டை, மே அம்மையார்,  ஆதரித்தவர்.


அவருக்கு அடுத்தபடியாக வாக்குகளைப் பெற்ற ஆண்ட்ரியா லீட்சம் அம்மையார், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகவேண்டும் என்ற தரப்பை ஆதரித்து பிரசாரம் செய்தவர்.


அடுத்த சுற்று வாக்குப்பதிவு எதிர்வரும் வியாழனன்று நடைபெறவுள்ளது.


இந்தச் சுற்றில் குறைந்த வாக்குகள் பெற்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட லியாம் ஃபாக்ஸ் மற்றும் போட்டியிலிருந்து விலகிக்கொண்ட ஸ்டீபன் க்ராப் ஆகியோரை அடுத்து இப்போது போட்டியில் மூன்று பேர் போட்டிக் களத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment