July 7, 2016

போதை வஸ்து குற்றம் புரிவோரின் கருணை மனு நிராகரிக்கப்படும் போதை வஸ்து கடத்தலுக்கு மரணமே தண்டனையாகும் நீதிபதி இளஞ்செழியன் அறிவிப்பு!

சட்ட விளைவுகள் தெரியாமல் போதை வஸ்து கடத்தல் மற்றும் விற்பனை குற்றச் செயல் புரிவோரின் கருணை மனுக்கள் கவனத்தில் எடுக்கப்படமாட்டாது.
பிணை கோரி செய்யப்படும் அத்தகைய மனுக்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

போதை வஸ்து கடத்தல் குற்றம் புரிவோருக்கு அதிகூடிய தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

கேரளாவில் இருந்து கொண்டு வந்ததாகக் கருதப்படுகின்ற 39 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பினை மனு தொடர்பான வழக்கு விசாரணையின்போதே இந்த அறிவித்தலையும் எச்சரிக்கையையும் நீதிபதி இளஞ்செழியன் விடுத்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மிகவும் சொற்ப அளவு என்று கருதப்படுகின்ற 2 கிராம் ஹெரோயின், மோபின், கொக்கெயின் போன்ற போதைப் பொருளை ஒருவர் தனது உடைமையில் வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று போதை வஸ்து சட்டத்தின் 54 ஆம் பிரிவு பரிந்துரை செய்கின்றது.

அதேவேளை, 5 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா உடைமையில் வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்திருந்தால் 7 ஆண்டுகள் வரை கடூழியச் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகின்றது.

போதைப் பொருள் குற்றம் தொடர்பான இத்தகைய விடயங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றத்தினால் விசாரணை செய்யப்பட்டு, தண்டனை தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என போதை வஸ்து தண்டனைச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

அண்மைக் காலமாக யாழ் குடாநாட்டு கடற்கரையோரங்களில் பெருமளவான கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றைக் கடத்தி வந்த சந்தேகத்தில் பலர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலைமை தொடர்வதை அனுமதிக்க முடியாது.

யாழ் குடாநாடு போதை வஸ்து இல்லாத சாம்ராச்சியமாக உருவாக்கப்பட வேண்டும் என்பதே நீதிமன்றின் இலக்காகும். நீதிமன்றத் தீர்ப்புக்கள் மக்களைப் பாதுகாக்கும் கேடயங்களாக மாற வேண்டும். கைது செய்யப்படும் விசாரணைக் கைதிகள் சிறைச்சாலை சீர்திருத்தப் பள்ளி மாணவர்க ளாமாற வேண்டும்.

போதை வஸ்து உடைமையில் வைத்திருப்பது, அதனை விற்பனை செய்வது அதனைப் உட்கொள்வது போன்ற குற்றச் செயற்பாடுகளை யாழ் குடாநாட்டில் அனுமதிக்க  முடியாது. அதனால் தான் யாழ் மேல் நீதிமன்றம் போதை வஸ்து வழக்குகளில் மிகவும் கடும் போக்கு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றது.

போதை வஸ்து பாவனை மற்றும் போதை வஸ்து குற்றச் செயல்களில் இருந்து, மாணவர் சிறார்களைப் பாதுகாக்க வேண்டும். இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டும்.

அதேபோன்று, மாணவிகளையும் பெண்களையும்; பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஏனெனில்  அனைத்து குற்றங்களுக்கும் ஒரு வகையில் போதை வஸ்துவே பின்னணியாகக் காணப்படுகின்றது.
மரண தண்டனைக்குரிய போதை வஸ்து குற்றச் செயல்களில், சட்ட விளைவுகள் தெரியாமல் ஈடுபடுபவர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

போதை வஸ்து கடத்தல் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்கள், அத்தகைய குற்றச் செயல்களைப் புரிந்துவிட்டு, நீதிமன்றத்தில் கருணை காட்டுமாறு கோருகின்ற விண்ணப்பங்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படும்.

மரண தண்டனைக்குரிய குற்றத்தைப் புரிவது மட்டுமல்லாமல், யாழ் குடாநாட்டை சீரழிக்கின்ற போதை வஸ்து வர்த்தகம் என்ற குற்றச்செயல்களை அனுமதிக்க முடியாது. அத்தகைய குற்றச் செயல்களைப் புரிபவர்களுக்குக் கடும் தண்டனையே வழங்கப்படும் என போதை வஸ்து குற்றச் செயலுக்கான சட்ட விளைவுகள் குறித்து, அறிவுறுத்தியுள்ள நீதிபதி இளஞ்செழியன், பிணை மனு தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆவணி மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment