July 20, 2016

ராஜீவ் கொலை வழக்கு! நளினிக்கு தொடரும் சோகம்!

முன்கூட்டியே நளினியை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.


உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுக்க நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இதற்கு பதிலளித்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நளினியை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என பதில் அளித்தது.

இதனையடுத்து விடுதலையை எதிர்பார்த்து வழக்கு தாக்கல் செய்த நளினி ஏமாற்றமடைந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நளினி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நளினி விடுதலையில் தமிழக அரசு முடிவு எடுக்கலாம்! வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக்கோரி ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி தொடர்ந்த வழக்கில், ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கின் தீர்ப்பு வெளியான பின் நளினியின் மனு குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என்று சென்னை உயர் நீதிமன்றம், தெரிவித்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும், 161வது விதி மூலம் தன்னை விடுவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவிற்கு தமிழக உள்துறை துணைச் செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் அளித்த பதில் மனுவில், ' 20 வருடங்கள் சிறையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு நளினி வழக்கில் பொருந்தாது.

இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், நளினி மனு மீது தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்து நளினி மனுவை முடித்து வைத்தது.

இதுதொடர்பாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியை தொடர்பு கொண்டுபேசினோம். “ தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என 1994 -ம் ஆண்டு இன்றைய முதல்வர் ஆட்சியின்போது அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி தன்னையும் விடுதலை செய்யவேண்டும் என்று நளினி 22. 2 2014 அன்று தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார்.

அதன்படி தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் சத்தியநாராயணன், 'உச்ச நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கின் தீர்ப்பு வெளியான பின் நளினியின் மனு குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் என்றார்.

No comments:

Post a Comment