July 6, 2016

கொத்துக் குண்டுகள் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்த வேண்டும்! - நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு 1

இறுதிப் போரில் கொத்துக்குண்டுகள் பாவிக்கப்பட்டமை குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஓமியோபதி சட்டமூலம் மீதான விவாதத்தில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 
இதன்போது அவர் மேலும் கூறுகையில், "போரால் வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட பலரின் உடல்களின் செல் துண்டுகள் இருக்கின்றன. தேவையான மருத்துவத்தைப் பெறுவதற்கு மாவட்ட வைத்தியசாலைகளில் உரிய வசதி இல்லை. அதற்குரிய நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான முழு விவரத்தையும் அரசு திரட்ட வேண்டும். அதேவேளை, இறுதிப் போரில் கொத்துக்குண்டுப் பாவனை தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர், "கொத்துக்குண்டுகள் வீசப்பட்டமைக்கு ஆதாரபூர்வமான சாட்சிகள் எதுவும் இல்லை. மக்கள் வழங்கிய முறைப்பாடுகளில் மாத்திரமே இவை பற்றிக் கூறப்பட்டுள்ளன. அவை வீசப்பட்டாலும்கூட சர்வதேச சட்டத்துக்கு முரணானது இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

கொத்துக்குண்டுகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையே ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பரணகமவின் கருத்து வலியுறுத்தி நிற்கின்றது. இந்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கோரியுள்ளார். உண்மையில் நல்லிணக்கத்தைக் கொண்டு வரவேண்டும் என அரசு நினைக்குமானால், இது பற்றி பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

அதேவேளை, 'கோட்டா முகாம்கள்' என சித்திரவதை முகாம்கள் இருப்பதாக நாம் சுட்டிக்காட்டியபோதும் அவை மறுக்கப்பட்டன. எனினும், ஐ.நா அதிகாரிகள் இங்கு வந்தபோது அவற்றைப் பார்வையிட்டிருந்தனர். இதுபோன்ற விடயங்களில் அரசு பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துவதே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்.

சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வீடுகள் திருத்தப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதாந்தம் 50,000 ரூபா வழங்கப்படுகிறது. எனினும், வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளைத் திருத்துவதற்காக கடன் வழங்கப்படுகின்றது. ஏற்கனவே வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வட்டி அறவிடப்படுகின்றது. இவ்வாறான பக்கச்சார்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமல், போரால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைத் திருத்த அரசு இலவச உதவிகளை வழங்கவேண்டும்" - என்று கோரிக்கை விடுத்தார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி.

No comments:

Post a Comment