May 27, 2016

சம்பூரில் நடந்தது போல வேறெங்கும் நடந்ததில்லை! - கொதிக்கிறார் மஹிந்த !

வடக்கிலும், சம்பூரிலும் இடம்பெற்றவை நாட்டில் வேறெங்கும் இடம்பெறாத செயற்பாடுகள் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார். சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரை திட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

 
சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படையின் உயர் அதிகாரி ஒருவரை மிகவும் மோசமான முறையில் பேசிய காணொளிகள் சில ஊடகங்களிலும் விஷேடமாக சமூக வலைத்தலங்களிலும் காண்பிக்கப்பட்டது,

இது முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்க தூதுவரின் முன்னிலையில் இடம்பெற்றமையால் அதன் தாக்கம் உயர்வாகும். முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள் சிலர் இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழைந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் அரசாங்கம் அதனை சிறு விடயமாக காட்டியதோடு அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறியுள்ள மஹிந்த, இது இதற்கு சமமான மற்றுமொரு சம்பவம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த மாகாணத்திலும் அரசியல்வாதிகள் முன் அனுமதியின்றி இராணுவ முகாமுக்குள் நுழைவதில்லை எனவும், கிழக்கு மாகாண முதல்வர் போல் பாதுகாப்பு அதிகாரியிடம் பேசியதில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னர் வடக்கில் இடம்பெற்ற சம்பவத்தை சிறிதாக காட்டி புறந்தள்ளியது போல் இந்த விடயத்தையும் புறந்தள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment