May 30, 2016

மத்திக்கும் வடக்குக்கும் தொடர்கிறது முரண்பாடு - யாழ் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் எதிரொலிப்பு!

மத்திக்கும் - வடக்கு மாகாணத்துக்கும் இடையிலான பிரச்சினை, யாழ்ப்பாணப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் எதிரொலித்துள்ளது.


வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிவடைந்து விட்டது என்று தெரிவித்து வெளியேறிய பின்னரும், மத்திய அரசின் பிரதிநிதியான இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தொடர்ந்தும் நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்காத இணைத் தலைவர்களான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் பங்குபற்றியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் முன்னைய பிரதேச செயலாளரின் நடவடிக்கை தொடர்பில் விமர்சித்துள்ளார். மக்களுக்கான சமுர்த்தி திட்டம், வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவர் மீது மக்கள் முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் காரணமாகவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். தற்போது புதிய பிரதேச செயலர் கிடைத்திருக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன், நீங்களும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இன்னொரு பெண் மீது குற்றம் சுமத்துகின்றீர்கள்.

அவர் தற்போதும் பிரதேசசெயலராக இருக்கின்றார். அவர் மீது தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம். இப்போதுள்ள பிரதேச செயலாளருக்கு எதிராகவும் இவ்வாறு முறைப்பாடுகள் கிடைத்தால் இடமாற்றம் செய்வீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு திருமதி விஜயகலா மகேஸ்வரன், நானும் பாதிக்கப்பட்ட பெண். நீங்களும் (அனந்தி) பாதிக்கப்பட்ட பெண். பாதிக்கப்பட்ட பல பெண்களின் முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே, முன்னாள் பிரதேச செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்று பதிலளித்துள்ளார்.

இதற்குப் பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிறிது நேரத்தின் பின், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கூட்டத்தை முடிப்பதற்கான அறிவிப்பை விடுத்து நன்றியுரை சொல்வதற்குத் தயாராகியுள்ளார்.

முதலமைச்சரை மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் தடுக்க முற்பட்ட போதும் முதலமைச்சர் கூட்டம் முடிந்தது நன்றி என்று தெரிவித்து விட்டு மண்டபத்திலிருந்து வெளியேறியமையை தொடர்ந்து பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளும் வெளியேற முற்பட்டுள்ளனர்.

எது எவ்வாறாக இருப்பினும் அரச அதிகாரிகளை வெளியேறாமல் தடுத்து தொடர்ந்தும் கூட்டத்தை திருமதி விஜயகலா மகேஸ்வரன், நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிரலில் குறிக்கப்பட்டிருந்த, சிறுகைத்தொழில் தொடர்பான விடயம், மீள்குடியமர்வு ஆகிய விடயம் தொடர்பாக ஆராயப்பட்ட பின்னரே கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment