May 30, 2016

யுத்தத்தை நிறுத்தக் கோரி பிரபாகரனுக்கு கடிதம் அனுப்பினேன் - ஆனந்தசங்கரி

இறுதிகட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்கள் மரணிப்பதை தடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம்
தாம் கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அதற்கான எந்த நடவடிக்கைகளையும் த.தே.கூ மேற் கொள்ள வில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.

மேலும், இறுதி கட்ட யுத்தத்தின் போது மக்கள் வெளியேற முடியாமல் தவித்தார்கள். இதன்போது அவர்கள் இறந்து விடுவார்கள் என எனக்கு தெரியும். அதனால் எமது மக்களை காப்பாற்றுமாறு த.தே.கூட்டமைப்பிடம் நான் கோரிக்கை விடுத்திருந்தேன் ஆனால் அவர்கள் எனது கோரிக்கையை காதிலும் போட்டுக்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டினார்.

அதுமட்டுமின்றி யுத்தத்தை நிறுத்துமாறு 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்தேன். அந்தக் கடிதத்தில் “இந்த போர் வெற்றி பெறாது, எமது தமிழ் மக்கள் மரணிப்பார்கள், ஆகவே இந்த யுத்தத்தை உடனடியாக இடைநிறுத்துங்கள்” என தெரிவித்திருந்தேன் ஆனால் அவரும் யுத்தத்தை கைவிட்டபாடில்லை எனது அந்த முயற்சியும் தோழ்வியடைந்தது என அறிவித்தார்.

மேலும் யுத்தத்தை நிறுத்துமாறு சர்வதேச ரீதியிலும் கோரிக்கையை முன்வைத்தேன். ஆனால் அவர்களும் மௌனம் சாதித்தார்கள். யாரும் முன்வரவில்லை. அவரவர் தங்களைப் பாதுகாப்பதற்காகவே முயற்சிகள் மேற்கொண்டார்கள். மக்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என இதன்போது ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment