August 12, 2015

பிறந்து 10 நாட்களான சிசுவைக் கைவிட்டு இளம் தாய் தற்கொலை! குழந்தையின் பெயர் !

மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகன் கோயில் வீதி, சிவத்த போக்கடியை சேர்ந்த இருபது வயதுடைய இளம் தாய் இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தர்மலிங்கம் ஜனனி என்ற இளம் தாயே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சம்பவம் பற்றி அறிந்த கரடியனாறு பொலிசார் குறித்த இடத்துக்கு சென்று, மரணவிசாரணை மேற்கொள்ள ஏறாவூர் சுற்றுலா நீதிபதி அவர்களின் அனுமதியுடன் பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் அவர்களை அழைத்துச் சென்றார்கள்.
பிரதேச மரண விசாரணை அதிகாரி சம்பவம் பற்றி விசாரணை நடாத்தும்போது,  தற்கொலை செய்து கொண்டவரின் கணவரும், தாயும் வாக்குமூலம் அளித்தனர்.
கணவர் ஜோர்ஜ் வெஸ்லி என்பவர் தனது வாக்குமூலத்தில்,
எனக்கும், ஜனனிக்கும் 13/09/2014 அன்று திருமணம் நடைபெற்றது.எங்களுக்கு சென்ற 02/08/2015 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகப்பிரசவமாக பெண் குழந்தையொன்று கிடைத்தது.
இக்குழந்தைக்கு “ஜோய்லா ஷனோ” என்று பெயர் சூட்டி பதிவு வைத்தேன்.
நான் திருகோணமலை தேவாலயம் ஒன்றில் வேலை செய்வதால், நேற்று எனது மாமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று பதிவை எடுத்துவருமாறு தொலைபேசியில் கூறினேன்.
அப்பதிவை எடுத்து வந்தபிறகு, எனது மனைவியான ஜனனி என்பவர் எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து ஏன்? மகளுக்கு இவ்வளவு பெரிய பெயரை வைத்தீர்கள் என்று என்னோடு முரண்பட்டார்.
நானும் பலமுறை தாழ்மையாக கதைத்தும் அவர் ஏற்றுக்கொள்ளாததால், சரி எதிர்வரும் 21 ஆம் திகதி ஊருக்கு வந்து பெயரை மாற்றுவோம் என்றேன். அத்தோடு குழந்தை அழுவதாக சொல்லி தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார்.
இது விடயமாக கவலையோடு இருக்கும்போது, எனது மனைவியின் சகோதரியின் கணவர் நள்ளிரவு 03.30 மணியளவில் எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து ” எனது மனைவி தூக்கிட்டு தொங்கி மரணித்துவிட்டார்” என்ற செய்தியை கூறினார் என்றார்.
பிரேதப் பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment