August 30, 2016

ஒடுக்கப்படுகின்ற இனத்தைக் காப்பது யார்? பான் கீ மூனிடம் ஒரு கேள்வி

யுத்தம் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொள்கிறது.



நில அபகரிப்பு, குடிப்பரம்பல் மாற்றம், மொழிச்சிதைப்பு பண்பாட்டு சீரழிப்பு, பொருளாதார அழிப்பு போன்றவை பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன், மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் மிகப்பெரிய ஆபத்து தமிழ் மக்களுக்கு ஏற்படும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இரண்டாவது முறையாக இலங்கை வரும் தாங்கள் சுதந்திர வாழ்வுரிமைக்காகப் போராடும் இனத்தை அடக்கி ஒடுக்கி முடிவில் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு இன அழிப்புச் செய்த போதும் தாங்கள் எடுத்த வலுவான முன்னகர்வு என்ன?

2009ல் விமானத்தில் சென்று சுற்றிப்பார்த்து விட்டு கூட்டறிக்கை வெளியிட்டீர்கள். வழமை போல் இலங்கை அரசு கண்டு கொள்ளவில்லை. நீங்களும் அதை செயற்படுத்த அக்கறை செலுத்தவில்லை.

சமாதானம், சமத்துவம், நீதி நியாயம், எனும் கோட்பாட்டோடு தொடங்கிய ஐக்கிய நாடுகள் சபை ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலாக ஒலிக்கத்தவறிவிட்டது என்பதை உங்களின் பேசவல்ல அதிகாரியே இலங்கை விடயத்தில் ஐ.நா தோற்றுவிட்டது என ஒரு முறை கூறியிருந்தார் என்பதை நினைவூட்டுகின்றோம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அரனாக இருக்க வேண்டிய ஐ.நா, பார்வையாளராக வெறும் கண்டண அறிக்கை விடுவதும் காலக்கெடு வழங்கியதுமே இந்த ஏழு ஆண்டுகளில் கண்ட மிச்சம்.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட 146,679 நபர்களின் நிலை என்னவென்று பொறுப்புக் கூறும் பொறிமுறையை சாத்தியப்படுத்தினீர்களா?

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நலிவுற்றுப் போய் விட்ட பிரேரணையாகவே தற்போது மாறிவிட்டது. எதிர் காலத்தில் மனித உரிமைகள் விவகாரம் காணாமல் போய்விடக்கூடிய நிலமை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகின்றோம்.

உலகமும் நீதியின், நியதியை மாற்றி விட்டதா? எனும் ஆதங்கம் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்கு எழுகிறது. தமிழினத்தை நீங்களும் மனிதர்களாக கருதவில்லையா? ஒரு தேசிய இனம் சுதந்திர வாழ்வுரிமைக்காக போராடுவது உலக ஜனநாயக ஒழுங்கில் தவறா?

எம்மை விட குறைந்த நிலப்பரப்பும் மக்கள் தொகையும் கொண்ட கிழக்குத்தீமோர், கொசோவா, தென்சூடான் போன்ற நாடுகள் தனி நாடாக்கியதும் அதை ஐ.நாவும் ஆதரித்ததே!!!

நாம் ஒன்றைத்தேச ஒழுங்கில் போராடாமைதான் தவறாகிவிட்டதா? யுத்தம் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மேற்கொள்கின்றது.

எனவே, தாங்கள் பதவிக்காலத்தின் நிறைவில் வருகின்றீர்கள். பயனுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த வலுச் சேருங்கள். வெறுமனே வெறும் சம்பிரதாய பூர்மமான பயணமாக மாற்றிவிடாதீர்கள்.

இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் தமிழ்மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படக்கூடிய வகையில் சர்வதேச சுயாதீனமான விசாரணையே மேற்கொள்ளவேண்டும்.

மாறாக உள்ளக பொறிமுறை என்பது குற்றவாளியே குற்றவாளியை விசாரிக்கும் கங்காரு நீதிமன்றம் போல் ஆகிவிடும். இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா?

காணாமல் போனவர்களினதும், சிறைக்கைதிகளினதும், மீள்குடியமர்விலும், பாதுகாப்புத்தரப்பால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவிப்பதிலும் கூட நல்லெண்ணம் காட்டாத நல்லாட்சி அரசு உலகத்தையே ஏமாற்றுகின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் காட்சி மாற்றம் நிகழவில்லை. தமிழ் தலைமைகள் மீண்டும் ஒரு தடவை ஏமாற்றப்படுவார்கள். எனவே, தமிழ் மக்களின் இறுதி நம்பிக்கை ஐக்கிய நாடுகள் சபை தான் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment