August 30, 2016

ஈழத் தமிழர்களுக்குத்தான் ஐ.நாவும் அநீதி இழைத்தது

தமிழர்களுக்கு எதிரான அநீதி இன்னமும் தொடர்கிறது என இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐ.நா குழு தெரிவித்துள்ளது. ஐ.நா சபை சார்ந்த வெவ்வேறு அமைப்புகள் தத்தம் பணிநிலை சார்ந்து தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.


அந்த வகையில், இன ரீதியாக அநீதிகளை ஒழிப்பதற்கான ஐ.நாவின் குழு இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி இன்னமும் தொடர்கிறது என தெட்டத்தெளிவாக கூறியுள்ளது.

இப்போது நாம் கேட்பதெல்லாம் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதனால் தமிழினத்துக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா? என்பதுதான்.

நல்லாட்சியை காப்பாற்ற வேண்டும் என்று கருதும் அமெரிக்கா, ஜெனிவாத் தீர்மானத்தை வலுக் குறைப்பதில் தீவிரமாக இருந்தது.

இன்றுவரை நல்லாட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதைத் தவிர, தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அமெரிக்கா ஒரு போதும் நினைத்ததில்லை.

அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்கத் தூதுவர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய செய்தி எதனையும் தராமல் சென்று விட்டார்.

நாங்கள் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் ஜனநாயக ரீதியில் தொடர்ந்து போராடுங்கள் என்பது மட்டுமே அவரின் கருத்தாக இருந்தது.

ஆக, இன ரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐ.நாவின் குழு தமிழ் மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது என அறிக்கைப்படுத்த, அமெரிக்காவோ நாங்கள் எதுவும் செய்ய முடியாது. உங்களின் பிரச்சினையை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

இங்குதான் ஐ.நாவின் அறிவிப்புகளும் அமெரிக்காவின் நிலைப்பாடுகளும் மாறுபட்ட தன்மையை கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

அதாவது அமெரிக்காவைப் பொறுத்தவரை, இலங்கையில் மகிந்த ராஜபக்ச­ தரப்பு ஆட்சியில் இல்லாமல் போனால் அது போதும். மற்றும்படி தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் என்ன? காணாமல்விட்டால்தான் என்ன? என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு.

இவை ஒருபுறம் இருக்க, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி இன்னமும் தொடர்கிறது என அறிக்கைப்படுத்தியுள்ள இனரீதியான அநீதிகளை ஒழிப்பதற்கான ஐ.நாவின் குழு, இதுவரை காலமும் மெளனமாக இருந்துள்ளது என்பது தான் அதிர்ச்சிக்குரிய விடயம்.

அதிலும் ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூட இலங்கைத் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர் என்பது மறுக்க முடியாத உண்மை.

வன்னிப் போரின்போது தங்களைக் காப்பாற்றுமாறு தமிழ் மக்கள் கெஞ்சி மன்றாடிய போதும் அந்த மக்களை காப்பாற்றுவதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

யுத்தத்தில் அகப்பட்டுள்ள அப்பாவி பொது மக்களை காப்பாற்றுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக ஐ.நா செயலாளர் நாயகம் இருந்தார் எனில் அதற்கான பொருள்கோடல் வேறுவிதமாகவே அமையும்.

போர் முடிந்த பின்பு ஒரு சம்பிரதாயத்துக்கும் சமாளிப்புக்குமாக வன்னிப் பெருநிலப்பரப்புக்கு வந்த ஐ.நா செயலாளர் உலங்கு வானூர்தியில் முள்ளிவாய்க்காலின் புறநிலைப்பகுதிகளை பார்த்துவிட்டுச் சென்றார்.

இங்குதான் ஐ.நா சபையின் செயலாளர் ஈழத் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதியின் உச்சத்தில் இருந்து காணப்பட்டது.

ஆக, தமிழ் மக்களுக்குத் தொடர்ந்தும் அநீதி இழைக்கப்படுகிறது என்ற செய்தியுடன் உலகில் ஐ.நா சபை அநீதி இழைத்த ஓர் இனமாகவும் தமிழ் மக்களை குறிப்பிட்டாக வேண்டும்.

No comments:

Post a Comment