August 1, 2016

விடு­தலைப் புலி­களின் போர் அமெ­ரிக்கா நடத்தும் ஆய்வு!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தப் போர் தொடர்பான ஆய்வு முயற்சிகளும், தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஆய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.


அமைச்சரவையில் அண்மையில் அனுமதி பெறப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ள, தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிறுவகம் இதில் முதலாவது.

புத்தலவில் உள்ள இராணுவ அதிகாரிகள் திறன் விருத்தி நிலையத்தில், கடந்த 25ஆம் திகதி நடத்தப்பட்ட மேஜர் ஜெனரல், பிரிகேடியர், கேர்ணல், லெப்.கேர்ணல், மேஜர் மற்றும் கப்டன் தர அதிகாரிகளுக்கான, எதிர்கால நவீன பாதுகாப்புச் சவால்கள் தொடர்பாக நடத்தப்பட்ட இரண்டு நாள் கருத்தரங்கு இரண்டாவது.

அமெரிக்காவின் வெஸ்ட் பொயின்றில் உள்ள நவீன போர் நிறுவகத்தின் ஆய்வுநிலை அதிகாரிகள் குழுவொன்று, இலங்கையில் நடந்த போர் பற்றி மேற்கொண்டிருக்கின்ற ஆய்வு மூன்றாவது.

இந்த மூன்றும் கிட்டத்தட்ட சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இது சந்தர்ப்பவசமான ஒன்று என்றாலும், இந்த விடயங்கள் உன்னிப்பாக நோக்க வைக்கின்றன என்பது முக்கியமானது.

தேசிய பாதுகாப்புக்கான கல்வி நிறுவகம் என்ற பெயரில், ஆங்கிலத்தில் திங் ராங்க் (Think Tank) என்று அழைக்கப்படும் ஒரு புலமையாளர் குழுவை இலங்கை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது.

பல்வேறு நாடுகளில் இதுபோன்ற புலமையாளர் குழுக்கள் இயங்குகின்றன. இந்த புலமையாளர் குழுக்கள், நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல், கொள்கை சார்ந்த கருத்துருவாக்கங்களை ஏற்படுத்துதல், ஆய்வுகளில் ஈடுபடுதல் போன்றவற்றை மேற்கொள்வது வழமை.

இலங்கையில் போர் நடந்த காலங்களில், போரைப் பற்றி வெளியே யாரும் பேசுவதை அதில் உள்ள குறைநிறைகளைப் பேசுவதை எந்த அரசாங்கமும் விரும்பியதில்லை. எனவே, இத்தகைய தேசிய பாதகாப்புக்கான புலமையாளர் குழுவை உருவாக்குவது குறித்து சிந்திக்கப்படவில்லை.

ஆனால், போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கழித்து, தேசிய பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கு வசதியாக, தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிறுவகத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே இது கையாளப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சின் அனுசரணையுடன் இயங்கும் சர்வதேச உறவுகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிலையமே, தேசிய பாதுகாப்பு தொடர்பான கற்கைகள் விவகாரத்தையும் கையாண்டு வந்திருந்தது.

ஆனால், இப்போது தனியானதொரு நிறுவகமாக உருவாக்கப்பட்டிருப்பது, தற்போதைய அரசாங்கம் எதிர்கொள்கின்ற பல்வேறு பாதுகாப்பு சவால்களுக்கான தீர்வைத் தேடுகின்ற நோக்கம் கொண்டது என்பதை மறுக்க முடியாது.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் கவலைப்பட முடியாத நிலையில் இல்லை என்பதையும் இந்த அமைப்பின் உருவாக்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, வெளியிலிருந்து தீவிரவாதம் இலங்கைக்குள் நுழைவதற்கான வாயில்களை இனங்காணும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இத்தகைய கட்டத்தில் தான், இராணுவ உயர் அதிகாரிகளுக்கான நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு புத்தலவில் நடத்தப்பட்டிருந்தது.

தற்கால சூழலில் தீவிரவாதத்தை எதிர்கொள்வதற்கான அணுகுமுறைகள் என்பது இந்தக் கருத்தரங்கின் தொனிப்பொருள். இராணுவத்திலுள்ள மூத்த அதிகாரிகள் பலரும் இந்தக் கருத்தரங்கில் புலமையாளர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கை இராணுவம் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து போர் அனுபவக் கருத்தரங்குகளை நடத்தியிருந்தது. இப்போது இராணுவத் தலைமையகம் நடத்தியிருந்த கருத்தரங்கு அதனை விட வேறுபட்டது.

தற்கால சூழலில், தீவிரவாதத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளுக்குப் பிந்திய காலகட்டம் ஒன்று உருவாகி விட்டது. புலிகளுக்குப் பிந்திய போர் உத்திகளும் வரத் தொடங்கிவிட்டன.

ஐரோப்பாவில் கத்திகள், கோடரிகளைக் கொண்டு நடத்தப்படும் தாக்குதல்கள், வாகனத்தால் மோதி பெருமளவானோரை கொல்லும் தாக்குதல் என்ற தீவிரவாதம் வேறுபட்ட அணுகுமுறைகளைக் கையாளத் தொடங்கியிருக்கிறது.

அதிநவீன கண்காணிப்பு கருவிகள் மற்றும் ஆயுதங்கள், வெடிபொருட்களை கண்டுபிடிக்கும் உத்திகள்,தொழில்நுட்பங்கள் வந்து விட்ட நிலையில், குண்டுகள், துப்பாக்கிகளை நகர்த்த முடியாத இடங்களிலும் தாக்குதல்களை நடத்தலாம் என்பதை இத்தகைய உத்திகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

கண்மூடித்தனமாகப் பொதுமக்களை இலக்கு வைக்கும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு இத்தகைய உத்திகள், அதிகளவு உழைப்பு மற்றும் ஆபத்தின்றி கூடுதல் பலனைப் பெற்றுத் தரக் கூடியவை.

எனவே, விடுதலைப் புலிகளுக்குப் பிந்தியகால தீவிரவாதச் சவால்களை எதிர்கொள்ளும் முறைகளை இராணுவத் தலைமையகம் தனது அதிகாரிகளுக்கு கற்பிக்கத் தொடங்கியிருக்கிறது.

வடக்கில் பாதுகாப்புச் சவால்கள் அதிகம் இருப்பதை அரசாங்கம் ஒப்புக் கொள்கிறது.

எல்லாத் தரப்புகளுடனும் முட்டி மோதிக் கொண்டு வடக்கில் அதிகளவு இராணுவத்தினரைத் தங்க வைக்க அரசாங்கம் முனைகிறது என்றால், வடக்கின் மீதான அதன் கவனத்தை சற்றும் தளர்த்த விரும்பவில்லை என்பதே அதன் அர்த்தம்.

விடுதலைப் புலிகளுக்குப் பிந்திய சூழலில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது மாத்திரமன்றி, அதுபற்றிய ஆய்வுகளிலும் இராணுவம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது.

அமெரிக்காவின் வெஸ்ட் பொயின்றில் உள்ள நவீன போர் நிறுவகம் (Modern War Institute) என்ற பாதுகாப்புக் கற்கைகள் ஆய்வு நிறுவகத்தின் ஆய்வாளர்கள் குழுவொன்று இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் தான், புத்தலவில் இந்தக் கருத்தரங்கும் நடந்திருந்தது.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ், செயற்படும் நவீன போர் நிறுவகம், தற்கால மற்றும் அண்மைக்கால மோதல்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைவர்கள் சவால்களை வெற்றி கொள்வதற்கான ஆய்வு அறிக்கைகளைத் தயார் செய்யும் நோக்கத்தைக் கொண்டது.

இந்த அமெரிக்க பாதுகாப்பு ஆய்வு நிறுவகம், விடுதலைப் புலிகளின் போர் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. இதற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் போர் தொடர்பான விரிவான ஆய்வுகள் எதுவும் உள்நாட்டு, வெளிநாட்டு இராணுவ மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

இந்தப் போர், போரில் பயன்படுத்தப்பட்ட உத்திகள் மற்றும் போர்த்தளபாடங்கள், இந்தப் போருடன் தொடர்புடைய, சமூக, உளவியல் காரணிகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதான ஆய்வு ஒன்றை இந்த அமெரிக்க இராணுவ ஆய்வு அமைப்பு தொடங்கியிருக்கிறது.

இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு உச்சநிலையை எட்டியுள்ள நிலையிலும், போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்படாத நிலையிலும் தான் அமெரிக்கா இந்த ஆய்வை ஆரம்பித்திருக்கிறது.

இதே அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தின் ஊடாக, நிலையான அமைதியை ஏற்படுத்தாவிடின், இலங்கையில் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் மீண்டும் போர் வெடிக்கும் என்று முன்னர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் பல்வேறு நாடுகளில் கண்ட அனுபவங்களில் இருந்தே இதனைக் கூறுவதாகவும் அவர் கூறியிருந்தார். பிளேக் குறிப்பிட்ட பத்து ஆண்டுகள் அண்மிக்கின்ற நிலையில், இலங்கையுடன் முன்னெப்போதுமில்லாதளவுக்கு நெருங்கிய உறவுகள் ஏற்பட்டுள்ள நிலையில்தான் அமெரிக்கா விடுதலைப் புலிகளுடனான போர் பற்றி ஆய்வு நடத்த ஆரம்பித்திருக்கிறது.

இந்த ஆய்வுக்காக வந்திருந்த எட்டு பேர் கொண்ட குழுவுக்கு நவீன போர் நிறுவகத்தின் பணிப்பாளரும், வெஸ்ட் பொயின்ற் இராணுவப் பயிற்சி அகடமியின், பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் திட்டத்தின் பணிப்பாளருமான, கேர்ணல் லியம் கொலின்ஸ் தலைமை தாங்கியிருந்தார்.

நிறுவனத்தின் ஆய்வுப் பணிப்பாளர் கலாநிதி லயனல் பீனர் மற்றும் மூன்று வழிகாட்டுநர்கள், ஐந்து இளநிலை அதிகாரிகளும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை உள்ளிட்ட போர் நடந்த பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு சம்பந்தப்பட்ட பலருடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பசிலன் பீரங்கி, கடற்புலிகளின் படகுகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் தளபாடங்களையும் பார்வையிட்டிருந்தனர்.

திருகோணமலைத் துறைமுகத்துக்கும் இந்த ஆய்வுக் குழுவினர் சென்றிருந்தனர்.

இந்த ஆய்வு நடத்தப்படும் காலமும், நடத்தப்படும் விதமும், பல்வேறு கேள்விகளை எழுப்ப வைக்கிறது.

அதாவது, போருடன் நேரடியாகத் தொடர்புபட்ட விஞ்ஞான ரீதியான காரணிகளையும், அமெரிக்கா பாதுகாப்புக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறது என்பதை உணர முடிகிறது, கிட்டத்தட்ட சமநேரத்தில் இலங்கையின் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி, நடத்தப்படும் இத்தகைய ஆய்வுகள், விடுதலைப் புலிகளின் போர் தொடர்பான விடயங்களை மாத்திரம் கருத்தில் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. எதிர்காலப் பாதுகாப்பும் கருத்தில் கொள்ளப்படுகிறது.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத்தான் அழிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களின் தனிநாட்டுக் கோட்பாடு இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது என்று ஜனாதிபதியும், பாதுகாப்பு அதிகாரிகளும் கூறிவரும் கருத்துக்களுடன் வைத்துப் பார்த்தால், இந்த ஆய்வுகளின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகவே தென்படுகிறது.

No comments:

Post a Comment