May 31, 2016

ஊடகவியலாளர்களை திட்டித் தீர்த்த பெண் மருத்துவர்!

நாடளாவிய ரீதியில் இன்று (31) மருத்துவர்கள் நான்கு மணித்தியாலயங்கள் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில்,
கிளிநொச்சியிலும் மருத்துவர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்கு சில பிராந்திய செய்தியாளர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது மருத்துவமனையின் பதில் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் நிசாந்தி ரணசிங்க மற்றும் அங்கிருந்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஜெயராசா ஆகியோருடன் பணிபகிஸ்கரிப்பு தொடர்பில் கலந்துரையாடிய பின்னர், அவர்களின் அனுமதி பெற்று வைத்தியசாலையில் வெறிச்சோடியிருந்த வெளிநோயாளர் பிரிவை புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதன் போது அங்கிருந்த பெண் மருத்துவர் ஒருவர் ஊடகவியலாளர்களை பணியாளர்களை கொண்டு கடும் தொனியில் அழைத்து யாருடைய அனுமதி பெற்று புகைப்படம் எடுக்கின்றீர்கள் என வினவியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஊடகவியலாளர்கள் தாங்கள் பொறுப்பானவர்களின் அனுமதி பெற்று விடயத்தை கூறிய போதும், ஏற்றுக்கொள்ளாத குறித்த மருத்துவர் ஊடகவியலாளர்களை காக்க வைத்து, தொலைபேசியின் மூலம் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

தனது அனுமதியை பெற்றே ஊடகவியலாளர்கள் செயற்படுவதாக பணிப்பாளர் தெரியப்படுத்தியதனை தொடர்ந்தும் கோபமுற்ற குறித்த வைத்தியர் ஊடகவியலாளர்களை திட்டித் தீர்த்துள்ளார் என செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment