May 27, 2014

இலங்கைக்கு மூவர் நாடுகடத்தப்பட்டமைக்கு மலேசிய மனித உரிமைகள் அமைப்புக் கண்டனம்!

மலேசியாவில் விடுதலைப்புலிகள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரும் இரகசியமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக மலேசிய மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு (சுராம்) கண்டனம் தெரிவித்துள்ளது.

சட்ட அணுகுமுறைகள் இன்றி இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

மலேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இரகசியமான முறையில் மூன்று இலங்கையர்களை நேற்று நாடு கடத்தியதாக இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சுராம் அமைப்பு பேச்சாளர் ஆர்.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு கடத்தப்பட்ட மூவரில் ஒருவர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி நீவ் சின் யெவ் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

சந்தேகநபர்களை நாடு கடத்துவது தொடர்பில் அவர்களது உறவினர்கள், சுராம் மற்றும் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்துக்கு முன்னறிவித்தல் விடுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்படுவதற்கு முன் 11 நாட்கள் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகவும் எனவே சட்ட ஆலோசனைகள் பெற நேரம் மிகவும் குறுகியதாக காணப்பட்டதெனவும் சட்டத்தரணி நீவ் சின் யெவ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து பொலிஸாருடன் கடந்த நாட்களில் சுமுகமாக செயற்பட்டதால் பிரச்சினை இலகுவில் தீரும் என எதிர்பார்த்திருந்ததாக ஆர்.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொலிஸார் தங்களிடம் பொய் கூறியதாகவும் பொலிஸ் பொறுப்பாளர் கலிட் அபு பக்கரிடம் சந்தேகநபர்கள் குறித்து வினவியபோது பதில் கிடைக்கவில்லை எனவும் பின்னரே அவர்கள் நாடு கடத்தப்பட்டதை அறிந்ததாகவும் ஆர்.தேவராஜன் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment