July 9, 2016

மைத்திரியின் கருத்தை சவாலுக்கு உட்படுத்திய மங்கள பதவி விலக வேண்டும்-கூட்டு எதிர்க்கட்சியினர்!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தை சவாலுக்கு உட்படுத்திய வெளிவிவார அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலக வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.


ஸ்ரீலங்கா நடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவோ, அல்லது அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி ஒன்றை வகிக்கவோ தகுதியற்றவர் எனத் தெரிவித்தார்.

“வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்டுள்ள பொறுப்பற்ற கருத்துக்களை நாம் எதிர்க்கின்றோம். உள்ளக விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல தடவைகள் கூறியிருக்கின்றார். வெளிவிவகார அமைச்சரை நியமிப்பது ஜனாதிபதியாவார்.

ஜனாதிபதிக்கு முன்பாகவே வெளிவிவகார அமைச்சரும்கூட சத்தியப்பிரமாணம் செய்துகொண்டு அதிகாரத்தை பெற்றுக்கொள்கிறார். இந்த நிலையில் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தியதால் அமைச்சரவை, அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து சம்பிரதாய சட்டதிட்டங்களையும் வெளிவிவகார அமைச்சர் மீறியுள்ளார்.

எனவே வெளிவிவகார அமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட விதிமீறல் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள அனைவரும் ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்.

போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிவருகிறது. அதனால் வெளிவிவகார அமைச்சர் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் நடுவில் இடைத்தரகராக இருந்துகொண்டு தீர்வைப்பெற முயற்சிக்கின்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிவருகிறது என்ற போதிலும், எந்தவித பதவிகளையும் அரசில் வகிக்கவில்லை. யார் எப்படிப்பட்ட அறிவிப்புக்களை விடுத்தாலும் நாட்டின் ஜனாதிபதி, அரசியலமைப்பின் ஊடாக அறிவிப்பொன்றை விடுத்திருக்கிறார்.

அத்துடன் எமது அரசியலமைப்பில் வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அரசியலமைப்பில் அப்படிப்பட்ட பிரிவொன்று இல்லை என்பதை வெளிவிவகார அமைச்சர் கற்றறிந்துகொள்ள வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளை இணைப்பது தொடர்பில் யோசனை முன்வைத்திருப்பது மட்டுமன்றி ஜனாதிபதியை நேரடியாகவே வெளிவிவகார அமைச்சர் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்.

எனவே இப்படிப்பட்ட ஒருவர் வெளிவிவகார அமைச்சர் பதவியை வகிப்பதற்கு அருகதையற்றவர். அரச தலைவர் மற்றும் அரசிலயமைப்பை மீறி நடப்பதற்கு அமைச்சர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே வெளிவிவகார அமைச்சரின் இந்நடவடிக்கை தொடர்பில் தலையிட்டு தகுந்த தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர எதிர்பார்க்கின்றோம்- என்றார்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான உள்ளக நீதிமன்ற விசாரணை பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியமற்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறிவரும் நிலையில் அது அரசாங்கத்தின் இறுதியான முடிவல்ல என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறி வருகின்றார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய போதும், அதற்குப் பின்னர் நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலும் மங்கள சமரவீர இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போது, உள்ளக பொறிமுறை விசாரணை தொடர்பிலான விடயத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும் கூறியிருந்ததுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கருத்துக்கள் இறுதியான முடிவாகக் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment