July 21, 2016

மன்னார் பள்ளிமுனையில் கடும் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டது கடற்படைக்கு காணி பறிக்கும் முயற்சி!

மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் உள்ள 25 வீட்டுத்திட்ட கிராம மக்களின் காணிகளை நில அளவை செய்து கடற்படைக்கு சொந்தமாக வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மக்களின் கடும் எதிர்ப்புகளினாலும், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் தலையீட்டினாலும் நேற்றுக் கைவிடப்பட்டது.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் உள்ள பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட கிராமத்தில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மக்களின் காணிகளில் படையினர் நிலைகொண்டிருந்தனர். முதலில் பொலிஸார் நிலைகொண்டுவிட்டு அங்கிருந்து வெளியேறிய நிலையில் கடந்த பல வருடங்களாக கடற்படையினர் நிலைகொண்டனர்.

குறித்த காணியின் சொந்தக்காரர்கள் தற்போது வரை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்தக் காணியில் தற்போது கடற்படையினர் நிலைகொண்டுள்ள நிலையில் குறித்த காணியின் உரிமையாளர்களினால் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தர்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் கடற்படையினர் நிலைகொண்டுள்ளமை குறித்து வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களுக்கு சொந்தமான குறித்த காணியில் கடற்படையினர் நிலைகொண்டுள்ள நிலையில் கடற்படையினருக்கு எதிராக தற்போது மன்னார் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக வழக்கு விசாரனைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில், நேற்றுப் புதன்கிழமை காலை 10 மணியளவில் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் உள்ள மக்களின் குடியிறுப்பு காணியான பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்திற்கு சொந்தமான காணியில் நிலை கொண்டுள்ள கடற்படையினருக்கு சொந்தமாக குறித்த காணியை வழங்கும் வகையில் நில அளவை செய்து கடற்படையினருக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறித்த காணி நில அளவை செய்யும் நடவடிக்கைக்கு பள்ளிமுனை கிராம மக்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளினை கடற்படை முகாமுக்கு முன் ஒன்றுகூடிய கிராம மக்கள் நில அளவைக்கு எதிராக தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

குறித்த காணி நில அளவீடு தொடர்பான பிரச்சினை குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இந்தநிலையில் குறித்த பகுதிக்கு உடனடியாக விஜயம் செய்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியோர் எதிர்ப்பைத் தெரிவித்த மக்களுடன் முதலில் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். பின்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட காணியில் நிலைகொண்டுள்ள கடற்படையினருடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியோர் குறித்த காணியின் நில அளவை குறித்து உரையாடினர்.

இதன் போது மன்னார் பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களுடன் உரையாடினர். மேலும், குறித்த காணி பள்ளிமுனை கிராம மக்களுக்கு சொந்தமானது எனவும், தற்போது குறித்த காணி தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரனைகள் இடம் பெற்று வரும் நிலையில் எவ்வாறு நில அளவை செய்ய முடியும் என கடற்படை அதிகாரிகள் மற்றும் நில அளவைத்திணைக்கள அதிகாரிகளிடம் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கேள்வி எழுப்பினர்.

பள்ளிமுனை மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்ற நிலையில் குறித்த நில அளவு மேற்கொள்ளும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுமாறு கடற்படை அதிகாரிகளிடம் மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் முயற்சியினால் குறித்த காணி நில அளவீடு செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்ட நிலையில், நில அளவீடு செய்யும் அதிகாரிகள் அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.

சிறிது நேரத்தின் பின் அக்கிராம மக்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றனர். குறித்த காணி நில அளவீடு குறித்தும் மக்களின் எதிர்ப்பு குறித்தும் குறித்த காணியின் உண்மை நிலைப்பாடுகள் தொடர்பாகவும் மாகாண சபை உறுப்பினர் மன்னார் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.





No comments:

Post a Comment