May 23, 2016

காணாமல் போனவர்களை தேடும் முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - பாதுகாப்புச் செயலாளர்!

சீரற்ற காலநிலையினால் காணாமல் போனவர்கள் அல்லது தகவல்கள் எதுவும் இல்லாதவர்கள் தொடர்பில் தொடர்ச்சியாக தேடுதல்கள்
முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தகவல்கள் எதுவும் இல்லாத நபர்களின் தகவல்கள் கிடைக்கும் வரையில் தொடர்ச்சியாக தேடுதல்கள் நடத்தப்படும்.இந்த தேடுதல் பணிகளுக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் செல்வதனால் நிவாரணங்களை வழங்குவதற்கும், காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதற்கும் சிரமங்கள் காணப்படுகின்றன.

மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்வதனால் இந்தப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுகின்றது.

வெள்ள நீர் வடிந்ததன் பின்னர் கிணறுகள் மற்றும் வீடுகளை சுத்தப்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த முப்படையினர் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment