May 20, 2016

தமிழக தேர்தல் முடிவுகள்! ஜெயலலிதா, கருணாநிதி உட்பட கட்சித் தலைவர்கள் கருத்து!

மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றியதற்கான அங்கீகாரம்தான் அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றி என தமிழக முதல்வர் ஜெயலலிதாவும்,
அதிமுக மற்றும் திமுக இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 1.1 சதவீதம் தான் என திமுக தலைவர் கருணாநிதியும், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயலலிதா மற்றும் கருணாநிதிதமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில், ஊடகங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலமாக அதிமுக மீது பல குற்றச்சாட்டுகளை திமுக அவிழ்த்து விட்டதாகவும், ஆனால், அதன் மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியவில்லையென்றும் கூறியுள்ளார்.

தமிழக மக்களுக்கான தனது நன்றியை, செயலில் காண்பிக்கப் போவதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

வெறும் 1.1 சதவீதம்தான் இடைவெளி- கருணாநிதிதேர்தல் முடிவு குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் திமுக தலைவர் கருணாநிதி, இந்தத் தேர்தலில் அதிமுக அணிக்கும், தி.மு.கழக அணிக்கும் உள்ள வாக்குகள் வித்தியாசம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள் மட்டுமே, அதாவது 1.1 சதவிகிதம் வாக்குகளே இரண்டு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்றும், தமிழக சட்டப்பேரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதான எதிர்க்கட்சியாக திமுக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில், இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி, திமுகவும், அதிமுகவும் பெருமளவில் பண விநியோகத்தில் ஈடுபட்டு வெற்றிபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

தமிழகத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக முதலவர் வேட்பாளர் அன்புமணி''தேர்தல் முறையில் பல சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாகவும் தங்களுடைய தரப்பை ஊடகங்கள் சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லவில்லை'' என்று அன்புமணி கூறினார்.

தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே போட்டியிடுமென்று அன்புமணி தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் நடந்த பண விநியோகத்தை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லையென்றும், மக்கள் மாற்று அரசியலுக்குத் தயாராக வில்லையென்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment