August 9, 2015

பாராளுமன்ற கதிரைகளை தக்க வைப்பதற்காக பலர் கடந்த காலங்களிலும் தற்போதும் இங்கு வாழ்கிறார்கள் - சி.கஜேந்திரகுமார்!

பாராளுமன்ற கதிரைகளை தக்க வைப்பதற்காக பலர் கடந்த காலங்களிலும் தற்போதும் இங்கு வாழ்கிறார்கள். அவர்களை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக சைக்கிள் சின்னத்தில்
வன்னியில் போட்டியிடும் வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே இதனைத் தெரிவித்தார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் தமக்கான சரியான ஒரு தலமைத்துவம் இல்லாது அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாம் நம்பியவர்கள், எமக்கான ஜனநாயக உரிமைகளை பெற்று தருவார்கள் என கருதியவர்கள் எல்லாம் தாம் இறக்கும் போது கூட பாராளுமன்ற உறுப்பினராகவே இருக்க வேண்டும் என செயற்படுகின்றனர். நாம் தேர்தலில் தோற்றாலும் எமக்கு வேலை செய்ய முடியும். ஆனால் கடந்த கால தமிழ் மக்களை பிரதிநிதித்துவப் படுத்திய பல எம்.பிகள் பாராளுமன்ற கதிரையை விட்டுவிட்டால் அவர்களுக்கு வேறு வேலை செய்ய முடியாத நிலை. அதனால் தமது வருமானத்திற்காகவும் மாதச் சம்பளத்தைப் பெறுவதற்காகவும் பாராளுமன்ற கதிரையை விடக்கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

தமது குடும்பங்களை இந்தியா, லண்டன், கனடா என கொண்டு சென்று விட்டு விட்டு எமது வாக்கின் மூலம் தெரிவாகி பாராளுமன்றம் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்பச் செலவுகளுக்கு வெளிநாடுக்கு கொண்டு செல்பவர்களும், மாதம் இரு தடவை என வெளிநாடு செல்பவர்களும் எம் கண்முன்னே இன்று வாக்கு கேட்டு வருகிறார்கள். கடந்த 15 வருடமாக வன்னியில் இருக்கும் எம்.பிகளில் மக்கள் யாரை உடனடியாக சந்திக்க கூடியதாக இருந்தது?, அவர்கள் வன்னியில் நின்றதிலும் பார்க்க வெளிநாடுகளில் நின்றதே அதிகம்.

எனவே, எம் உறவுகளே அவர்களின் பதவிக்காக நாம் இனியும் பலிக்கடாவாக முடியாது. இந்த நிலை மாறவேண்டும். உங்களுக்கான ஒரு தலைமையை நீங்கள் தெரிவு செய்யுங்கள். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் செய்வார்கள். அப்படி செய்யாவிட்டால் அவர்களை அடுத்த தேர்தலில் விரட்டுங்கள்.

எமது உரிமைக்காக நாம் மாவீரர்கள், பொதுமக்கள் எனப் பலரை இழந்துள்ளோம். அவர்களின் ஆத்மாக்கள் அமைதி அடையவேண்டும். அவர்கள் எமக்காக மடிந்தார்கள். அந்த எமது உறவுகளுக்காக நாம் எம்மால் முடிந்தளவு ஜனநாயக ரீதியாக என்றாலும் போராட வேண்டியவர்களாகவுள்ளோம். அதற்காக உறுதியான கொள்கையுடன் கடந்த 5 வருடங்களாக எந்த விதமான பிரதிநிதித்துவமும் இல்லாது அச்சுறுத்தலுக்கு மத்தியில் போராடிய, போராடி வருகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு இம்முறை ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள். சைக்கிள் சின்னம் வெற்றி பெற உதவுங்கள். கடந்த காலங்களை போல் என்றும் மக்களுக்காகவே நாம் இருப்போம் எனவும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment