August 28, 2015

நான் செய்து வந்த சேவைகள் எமது மக்களின் விடியலிற்காக தொடரும் - சுரேஷ்.பிறேமச்சந்திரன்!

தென்னிலங்கை அரசியல் சமூகம் நேரடியாகவும் தனது முகவர்கள் மூலமாகவும் வேட்பாளர்களைக் களமிறக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைப் பறிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை எமது மக்கள் மிகவும்
விழிப்புடன் இருந்து தகர்த்தெறிந்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒரு மகத்தான வெற்றியையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இதற்காக வடக்கு-கிழக்கு வாழ் சகல தமிழ் மக்களுக்கும் நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் குறிப்பாக எனது வெற்றிக்காகவும் பலநூறு இளைஞர்களும் யுவதிகளும் நண்பர்களும் தோழர்களும் கல்விச்சமூகத்தினரும் பொது அமைப்பைச் சேர்ந்தவர்களும் கடுமையாக உழைத்தனர். எனது வெற்றிக்கான அவர்களது உழைப்பு திட்டமிட்ட வகையில் தட்டிப்பறிக்கப்பட்டாலும் அவர்களது கடின உழைப்பிற்கு நான் எனது சிரந்தாழ்த்தி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதுமாத்திரமல்லாமல், ஒரு கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலும் நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டவன் என்பதன் அடிப்படையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்ற அடிப்படையிலும் 2016ஆம் ஆண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்வேன் என்று திரு. சம்பந்தர் கொடுத்த வாக்குறுதியைச் செயற்படுத்துவதற்கும் அதற்கான பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும் குறைந்த பட்சம் தேசியப் பட்டியலிலாவது சுரேஷ் க.பிறேமச்சந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக்கப்படவேண்டும் என்று வடக்கிலும்-கிழக்கிலுமிருந்து பலநூறு நிறுவனங்களும் பொது அமைப்புக்களும் கூட்டமைப்பின் நலன்விரும்பிகளும் கோரிக்கைகளை விடுத்திருந்தார்கள். 

தொலைபேசி ஊடாகவும் நேரிலும் பலநூறுபேர் என்னுடன் தொடர்புகொண்டு நான் பாராளுமன்ற உறுப்பினராகவேண்டும் என்ற தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

 அவர்களது கோரிக்கைகள் தமிழரசுக் கட்சியின் தலைமையால் நிராகரிக்கப்பட்டாலும் அவ்வாறான ஒரு தேவையைக் கருதி எனக்காகக் குரல்கொடுத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

பல்வேறுபட்ட தரப்பினரின் நிகழ்ச்சி நிரலுக்கமைய எனது வெற்றி தட்டிப்பறிக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரையில் கடந்த 35வருடங்களாக நான் செய்து வந்த சேவைகள் எமது மக்களின் விடியலிற்காக தொடரும் என்பதை வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன்.

எமது இனத்தின் விடுதலைக்கு எமது மக்களின் ஒத்துழைப்பு பூரணமாகத் தேவை. அதை எமது மக்கள் எப்பொழுதும்போல் தொடர்ந்தும் வழங்குவார்கள் என்றும் நம்புகின்றேன். 

சுரேஷ். க.பிறேமச்சந்திரன்
ஊடகப் பேச்சாளர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

No comments:

Post a Comment