August 23, 2015

வேலைக்கு சென்ற மகன் வீடு திரும்பவில்லை’.!கருணா குழுவினரே காரணம் மட்டக்களப்பில் தாய் சாட்சியம்.

செட்டிபாளையத்திலிருந்து காத்தான்குடிக்கு மேசன் வேலைக்கு சென்ற தனது மகன் இன்றுவரை வீடு திரும்பவில்லை என்று செட்டிபாளையம் தெற்கைச் சேர்ந்த வடிவேல் மகேஸ்வரி என்ற தாய், காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான மூன்றாவது விசாரணை அமர்வு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் சாட்சியம் அளித்த அவர், ‘வடிவேல் சிவகுமார் என்ற 27 வயதான எனது மகன், கடந்த 2007.11.09 அன்று எமது வீட்டிலிருந்து காத்தான்குடிக்கு மேசன் வேலைக்காக சென்றார். அவர் இன்றுவரை வீடு வந்து சேரவில்லை. அவர் வேலைக்கு சென்ற இடத்திலும் ஏனைய பகுதிகளிலும் தேடினோம் கிடைக்கவில்லை. அப்போது ஆரையம்பதியில் கருணா அம்மான் தலைமையிலான குழுவினர், முகாம் இட்டிருந்தர்கள். அவர்களே எனது மகனை பிடித்துள்ளார்கள்.
கருணா அம்மானின் குழுவிடம் சென்றும் விசாரித்தோம். ஆனால், கிடைக்கவில்லை. எனக்கு ஐந்து பெண் பிள்ளைகளும்; ஒரேயொரு ஆண் பிள்ளையுமே.  அவரையும் கடத்திவிட்டார்கள. தற்போது எனது பெண் பிள்ளைகளுடன் பல இன்னல்களை எதிர்கொண்ட வண்ணம் வாழ்ந்துவருகின்றோம்.
எனது மகன் தொடர்பில் ஐ.சி,ஆர்.சி, பொலிஸாரிடமும் முறையிட்டோம். இதுவரையில் எதுவித தொடர்பும் கிடைக்கவில்லை.  எனது ஒரேயொரு ஆண் பிள்ளையை எங்கிருந்தாலும் மீட்டுத்தாருங்கள்’ என கண்ணீர் மல்க அத்தாய் சாட்சியம் அளித்தார்.

No comments:

Post a Comment