June 7, 2015

வரலாற்றுப் பதிவுகள் உண்மையை உரைப்பவையாக இருக்க வேண்டும்!

வரலாற்றைத் திரிபுபடுத்தல் என்பது இந்த உலகத்தில் காலத்துக்குக் காலம் நடக்கும் அநியாயச் செயல். அதிலும் இலங்கைக்குள் நடந்த வரலாற்றுப் புனைவுகள் மனதைச் சிதைக்கக் கூடியவை.
வலியார் எளியாரை வதைப்பது என்ற விடயத்திற்குள் வரலாற்றை
மாற்றியமைத்தலும் முக்கிய விடயம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் இந்த நாட்டின் ஆதிக்குடிகள் என்ற பூர்வீக வரலாற்றை அறுத்தெடுத்தல் என்பதில் ஆரம்பித்த வரலாற்றுச் சிதைப்பு, தமிழ் மன்னர்களின் ஆட்சி மற்றும் அவர்களின் பணிகள், ஆலயங்களின் வரலாறுகள் என்பவற்றை சிதைப்பது வரை நீடித்துச் செல்கிறது.
இலங்கை முழுவதும் சிங்கள மயம் என்பதாக கதைகளை உருவாக்கும் திருகுதாளங்கள் இன்னமும் இந்த நாட்டில் அரங்கேறி வருவது வேதனைக்குரியது.
மகாவம்சத்தைத் தந்த மகாநாம தேரரை விட, மிக மோசமான மகாநாம தேரர்கள் இந்த நாட்டில் ஏராளமாக இருப்பதுதான் துன்பத்தின் தொடர்ச்சிக்குக் காரணம்.
தமிழில் வெளியிடப்படும் வரலாற்றுப் பாடநூல்களை ஒருகணம் பார்ப்போமாயின் தமிழ் இனத்தின் வரலாறுகள் எந்தெந்த வகையில் சிதைக்கப்பட்டுள்ளன என்பதை அறியமுடியும்.
இத்தகைய சின்னத்தனங்களால் இந்த நாடு எதனையும் சாதிக்க மாட்டாது. மாறாக சிங்கள தமிழ் இன வேற்றுமைகளையே வளர்க்கும்.
ஆக, வரலாறுகள் உண்மையை உரைப்பவையாக இருக்கவேண்டும். அப்போதுதான் அது வரலாறாக அமையும்.
திரிபுபடுத்தல்களையும் புனைவுகளையும் வரலாறாக்க முற்படும் போது வரலாறு என்ற சொற்பதம் பழுதடைந்து பெறுமதியை இழக்கும்.
இப்போது கூட, எங்கள் மண்ணில் நடந்த வன்னிப் போரின் போது இடம்பெற்ற சம்பவங்களை அறிய முடியாதவர்களாக நாம் இருப்பது கவலைக்குரியது.
வன்னிப் போர் நடந்து ஐந்து ஆண்டுகளே ஆன நிலையில், வன்னிப் போர் தொடர்பிலும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பற்றிய செய்திகளிலும் சரணடைந்த விடுதலைப் புலிகள் குறித்த தகவல்களிலும் ஏகப்பட்ட புனைவுகளும் முன்னுக்குப் பின் முரணான செய்திகளும் உள்ளன.
இந்தப் புனைவுகள், குறித்த சம்பவம் தொடர்பில் பூரணமான தெளிவின்றி ஊகத்தின் அடிப்படையிலானவையாக இருக்கலாம். இது ஒரு புறம்.
இதைவிட சிலர், விடுதலைப் புலிகளுடன் தமக்கு நெருங்கிய உறவு இருந்ததாகக் காட்டிக் கொள்ளும் வகையில் கற்பனையில் புனைவுகளை உருவாக்குகின்றனர்.

இந்த வகையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் வெள்ளைக் கொடியுடன் இலங்கைப் படையினரிடம் சரணடைந்தது தொடர்பில் வெளியாகும் தகவல்கள் வேறுபட்டவையாக உள்ளன.
அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு இராணுவம் தேநீர் கொடுத்ததன் பின்னரே சுட்டுக் கொன்றது எனக் கூறியுள்ளார்.
அதேநேரம் ஏற்கெனவே வந்த தகவல்களின்படி வெள்ளைக்கொடியுடன் வரும்படி இராணுவம் கூறிவிட்டு, அவர்கள் வெள்ளைக் கொடியுடன் சென்ற போது சுடப்பட்டதாக தெரிய வருகிறது.
இது தவிர வெள்ளைக் கொடியுடன் சரணடைதல் விடயத்தில் சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேநேரம் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் எழிலனின் மனைவியுமான திருமதி அனந்தி, கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஆலோசனைப்படியே எழிலன் உள்ளிட்ட போராளிகள் படையினரிடம் சரணடைந்ததாகக் கூறியுள்ளார்.
ஆக வன்னியில் நடந்தது என்ன என்பது பற்றிய ஒரு சரியான, தெளிவான பதிவுகளை நாம் இற்றைப்படுத்தாமல் விட்டால், இந்த வரலாறுகளும் வேறு விதமாகப் போகும். கவனம்.

No comments:

Post a Comment