May 8, 2015

யாழில் விபத்தில் சிக்கி துடிதுடித்துக் கொண்டிருந்த இளைஞன் - பார்வையாளர்களாக நின்ற பொதுமக்கள் (படம் இணைப்பு)

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.நேற்றுக்காலை 7.20 மணியளவில் புத்தூர் சந்தியிலிருந்து சுன்னாகம் செல்லும் வீதியில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

புத்தூர் பகுதியில் இருந்து இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதேநேரம் சுன்னாகம் நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று பருத்தித்துறையிலிருந்து சென்றுள்ளது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுக்குள்ளானார்.

முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நீண்ட நேரமாக இளைஞர் வீதியோரத்தில் வலியால் துடிதுடித்துக் கொண்டு இருந்துள்ளார்.

எனினும் வீதியால் சென்றவர்கள் எவரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற செய்தியாளர் ஒருவர் உடனடியாக அச்சுவேலி அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பை ஏற்படுத்தி விபத்துக் குறித்து அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த அம்புலன்ஸ் வண்டி மூலம் படுகாயமடைந்த நிலையில் கிடந்த இளைஞரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை பொலிஸாரும் விபத்துக் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து இளைஞருக்கு முதலுதவிச் சிகிச்சை வழங்கி இருந்தனர். சம்பவத்தில் புத்தூர் மருதடியைச் சேர்ந்த சிறிகுமார் (வயது-19) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்.

பிரஸ்தாப இளைஞருடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞர் சிறுகாயத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment