May 10, 2015

ஒப்பந்ததாரர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு. ( படங்கள் இணைப்பு)

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் ஒரு நபர் கையில் மண்எண்ணெய் கேனுடன் வந்தார். பின்னர் அவர், வந்த வேகத்திலேயே கேனை திறந்து மண்எண்ணெயை தனது தலையில் ஊற்றினார். 


பின்னர் தீப்பெட்டியை பற்ற வைத்துக்கொண்டு உடலில் தீ வைத்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டினார். 

இதை பார்த்ததும் அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து சென்று அவரது கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். 

ஒப்பந்ததாரர்

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அனுப்பர்பாளையம் ஜீவா வீதியை சேர்ந்த வேலுமணி (வயது 45) என்பதும், இவர் மாநகராட்சி நிர்வாகம் மூலம் 1-வது மண்டலத்தில் குடிநீர் குழாய் பதிப்பது உள்ளிட்ட பணிகளை செய்த ஒப்பந்ததாரர் என்பதும் தெரியவந்தது. 

மேலும், இவர் ஒப்பந்தம் எடுத்து செய்த பணிகளுக்கான பணத்தை மாநகராட்சி நிர்வாகம் தராமல் காலம் கடத்தி வந்ததை தொடர்ந்து இவர் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

இது குறித்து வேலுமணி கூறும்போது:-

பணத்தை மீட்டுதர வேண்டும்

நான் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு மாநகராட்சிக்குட்பட்ட 1-வது மண்டலத்தில் உள்ள பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பது, பழுதான குழாய்களை சீரமைப்பது உள்ளிட்ட வேலைகளை ஒப்பந்தம் எடுத்து செய்தேன். இதற்காக பலரிடம் இருந்து கடனாக பெற்ற பணத்தை வைத்து கொண்டு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகளை செய்து முடித்தேன். இதையடுத்து பணிகளை முடித்த பின்னர் அதற்காக செலவு செய்யப்பட்ட தொகையை மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டு விண்ணப்பித்தேன். 

ஆனால் இதுவரை அந்த தொகையை நிர்வாகம் கொடுக்கவில்லை. மேலும் ஆவணங்களை சரிபார்ப்பது என்ற போர்வையிலும், பல்வேறு காரணங்களுக்காகவும் என்னிடம் இருந்து சுமார் ரூ.2 லட்சத்திற்கு மேல் பணத்தையும் பெற்றுக்கொண்டனர். கடன் வாங்கிய நபர்களுக்கு நான் பணத்தை திரும்ப கொடுக்க இயலாத காரணத்தால், நான் இந்த தற்கொலை முடிவுக்கு வந்தேன். இது தான் எனக்கு தீர்வாக இருக்கும். இல்லையென்றால் அதிகாரிகள் எனக்கு வரவேண்டிய பணத்தை மீட்டுதர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர் வேலுமணியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பணத்தை விரைவில் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். 

No comments:

Post a Comment