February 1, 2015

விடுதலைச் சுடர் ஏந்தி வீறுடன் செல்வோம் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா!

தமிழினக் கருவறுப்புத் தாண்டவத்தை பல்வேறு வடிவங்களில் அரங்கேற்றி வரும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழர்கள் உலகெங்கும் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி விடுதலைச் சுடர் ஏந்திவாறு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பிரித்தானிய ஆட்சியிலிருந்து சிறிலங்கா விடுதலை பெற்ற நாளும் சிங்கள ஆதிக்கம் தமிழினக் கருவறுப்பை ஆரம்பித்த நாளுமாகிய பெப்ரவரித் திங்கள் நான்காம் நாள் புதன்கிழமை மாலை 4 மணிக்கு இல 10, Downing Street முன்பாகக் கொட்டொலிப் போராட்டத்துடன் ஆரம்பமாகும் இவ்விடுதலைச் சுடர் ஏந்திய கவனயீப்புப் போராட்டம் மாலை 6 மணியளவில் Westminister நாடாளுமன்ற சதுக்கத்தைச் சென்றடையவுள்ளது.
தொடர்ந்து இம்மாதம் 14ஆம் நாள் வரை பிரித்தானியாவின் பல பகுதிகள் ஊடாக இவ்விடுதலைச் சுடர் ஏந்திச் செல்லப்பட்டு பின்னர், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாண்ட், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கூடாக மார்ச் திங்கள் 16 ஆம் நாள் ஜெனீவாவை சென்றடையவுள்ளது. ஐ நாசபையின் 28 வது மனிதவுரிமைக் கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா அரசாங்கத்தினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற தமிழினக் கருவறுப்புக்கு நீதி கேட்டும் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும் என்னும் கோரிக்கை உட்பட, பல கோரிக்கைகளை முன்வைத்தும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் விடுதலைச் சுடர் ஏந்தி தொடர் போராட்டம் நடைபெறவுள்ள பகுதிகள் மற்றும் கால நேர விபரங்கள் வருமாறு
வடமேற்கு லண்டன் 05.02.15 - 07.02.15
வடகிழக்கு லண்டன் 08.02.15 - 09.02.15
தென்கிழக்கு லண்டன் 10.02.15 - 11.02.15
தென்மேற்கு லண்டன் 12.02.15 - 14.02.15
லண்டன் புறநகர் பகுதி வரை சென்று பின்னர் பிரான்ஸ் நாட்டு செயர்பாட்டளர்களிடம் விடுதலைச் சுடர் கையளிக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் காலை 10 மணி தொடக்கம் மதியம் 12.30 வரையும் பிற்பகல் 2.30 தொடக்கம் 5 மணி வரையும் என்றவாறு விடுதலைச் சுடர் ஏந்திய பயணம் அமைய உள்ளது.
பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கவனயீர்ப்புப் போராட்டமானது மேற்குறிப்பிட்ட பகுதிகளினூடாக மேற்கொள்ளப்படுகின்றபோது அவ்வப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செயலகங்கள் மற்றும் மாநகரசபை செயலகங்களில் மனுக்கள் கையளிக்கப்பட உள்ளன.விடுதலைச் சுடர் ஏந்தி வீறு கொண்டு முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் புகலிடத் தமிழர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒன்றாகி வென்றாவோம் வாருங்கள் என அழைக்கின்றார்கள் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் .
தொடர்புகளுக்கு: 0203 3719313

No comments:

Post a Comment