September 1, 2016

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்படுவதை தடுக்க முயன்றவருக்கு 2 வருட சிறைத்தண்டனை?

அவுஸ்ரேலியாவில் இருந்து தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக விமானத்தினுள் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளர் மீதான வழக்கு விசாரணை நாளை இடம்பெறவுள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்காக மெல்பேர்ணிலிருந்து டார்வின் செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டார்.

 
இதைத் தடுத்து நிறுத்துவதற்காக, பயணச்சீட்டு ஒன்றைப் பெற்று குறித்த விமானத்தில் ஏறிய ஜஸ்மின் பில்பிரோ என்ற அகதிகள் செயற்பாட்டாளர், விமான இருக்கையில் அமர மறுத்து தனது எதிர்ப்பினை வெளிக்காட்டினார். ஜஸ்மின் பில்பிரோவின் நடவடிக்கையைப் பார்த்து அங்கிருந்த மேலும் இருவரும் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டினர். இதையடுத்து குறித்த புகலிடக்கோரிக்கையாளர் நாடுகடத்தப்படுவதிலிருந்து தடுக்கப்பட்ட அதேநேரம் ஜஸ்மின் பில்பிரோ மீது சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கின் மீதான விசாரணை நாளை மெல்பேர்ணின் Broadmeadows Magistrates நீதிமன்றில் நடைபெறவுள்ளது. ஜஸ்மின் பில்பிரோ நடத்திய இப்போராட்டத்திற்கு இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஜஸ்மின் பில்பிரோவுக்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் அகதிகள் செயற்பாட்டாளர்கள் நாளை காலை ஒன்றுகூடி அமைதிப்போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment