September 28, 2015

ஒரே தட்டில் நிற்கிறார்கள் இந்தியாவும் மைத்திரியும்! – புகழேந்தி தங்கராஜ்!

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை யாருக்கு அதிர்ச்சியைத் தந்ததோ இல்லையோ, அந்த அறிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனாவின் பெயர் இருந்தது என்கிற செய்தி தமிழர்களுக்கு மட்டுமில்லாமல், சிங்களவர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

குற்றவாளிகள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்களில் நல்லாட்சி நாயகர் மைத்திரியின் பெயரும் இருந்தது என்றும், அதிபரின் பெயர் வெளியாவதைத் தடுப்பதற்காகவே பட்டியலிலிருந்த அத்தனைப் பெயர்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்றும் சொல்கிறது கொழும்பு டெலிகிராப். இலங்கை அரசு இதை மறுக்கவில்லை.
2009ல் நடந்த இனப்படுகொலையின் கடைசி சில தினங்களில்தான் முள்ளிவாய்க்கால் மண் ரத்தத்தால் நனைந்தது. ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட அந்த நாட்களில், இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான மகிந்த ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் சொல்லிவைத்ததைப் போல வெளிநாடுகளுக்குப் போய்விட்டனர். ‘அலிபி’ தயார் செய்வதற்கான திட்டமிட்ட நடவடிக்கை போலவே அது இருந்தது.
அந்த சில தினங்களில் போர் என்கிற பெயரில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை வழிநடத்தும் பொறுப்பில் இருந்தவர், இதே மைத்திரி தான். அப்படியொரு பொறுப்பில் இருப்பவரின் அனுமதியில்லாமல் அப்பாவித் தமிழர்களை சகட்டு மேனிக்கு ராணுவம் கொன்று குவித்திருக்க முடியாது…. வெள்ளைக் கொடிகளுடன் சென்றவர்களைச் சுட்டுக் கொன்றிருக்க முடியாது என்பது ஒரு தர்க்க ரீதியான வாதம்.
இந்த அடிப்படையில்தான், மைத்திரியின் பெயர் ஐ.நா.அறிக்கையில் இடம்பெற்றிருந்தது என்றும், அவரது பெயருடன் கோதபாய ராஜபக்சவின் பெயரும், முக்கியத் தளபதிகளின் பெயரும் அறிக்கையில் இருந்தது என்றும் கூறப்படுகிறது.
சென்ற சில மாதங்களாக, ‘என்னை மின்சார நாற்காலியில் ஏற்ற முயற்சிக்கிறார்கள்’ என்று மகிந்த ராஜபக்சவும், ‘நாங்கள் தான் மகிந்தனை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றினோம்’ என்று மைத்திரி&ரணில் கோஷ்டியும் மாறி மாறிப் பேசியதுதான் கொழும்பு வட்டாரத்தில் கொடிகட்டிப் பறந்த காமெடியாக இருந்தது. இப்போதுதான் அம்பலமாகியிருக்கிறது, மின்சார நாற்காலியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுதான் மைத்திரியின் முதல் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது என்கிற ரகசியம்.
‘மகிந்த ராஜபக்ச நாட்டில் இல்லாத அந்த சில தினங்களில் மைத்திரி பொறுப்பில் இருந்தது உண்மைதான்… ஆனால், அப்போது ஆல் இன் ஆல் அழகுராஜாவாக இருந்த கோதபாய சொல்வதைக் கேட்டாக வேண்டிய நிலையில்தான் அவர் இருந்திருப்பார்…. யதார்த்த நிலை இப்படியிருக்க, மைத்திரி மீது குற்றஞ்சாட்டுவது சரியல்ல’ என்று, அவருக்காகப் பரிந்து பேசுகிறவர்கள் இல்லாமலில்லை.
அப்படிப் பரிந்து பேசுபவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மைத்திரி என்பவர், 2009ல் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகும் எடுப்பார் கைப்பிள்ளையாகவே தான் இருந்தார் என்பது உண்மையென்றால், இப்போது அவர் யாருடைய கைப் பொம்மையாக இருக்கிறார்? அமெரிக்காவின் கையிலா…. இந்தியாவின் கையிலா? எப்போதுமே மற்றவர் கைப் பொம்மையாகவே இருக்கிற ஒருவரை நம்பியா தமிழர் நலனை, தமிழருக்கான நீதியை அவரிடம் அடமானம் வைக்கச் சொல்கிறார்கள்? இதுதான் ராஜதந்திரம் என்று நம்மை நம்பச் சொல்கிறார்களா சமந்தகர்களும் அவர்களைச் சுமந்தவர்களும் சுமப்பவர்களும்!
கடைசி சில தினங்களில் மட்டுமே நாற்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில், இலங்கைக்குத் திரும்பிய மகிந்த மிருகத்தை விமான நிலையத்தில் கட்டியணைத்து முத்தம் கொடுத்து வரவேற்றது இதே மைத்திரி தானே!
கோலியத்தை வீழ்த்திய டேவிட் மாதிரி, ஒரு கொடுங்கோலனைக் கூட நாம் எதிர்த்து நின்று சாதித்துவிட முடியும். உதடு நிறைய புன்னகையைப் பூசியபடி, நமது தோளில் கை போட்டபடியே நமது குரல்வளையில் கைவைக்கிறவர்களைச் சமாளிப்பதுதான் சிரமம். சுமந்திரனும் சம்பந்தனும் வேண்டுமானால் மைத்திரியை நம்பித் தொலைக்கட்டும்…. நம்மைப் பொறுத்தவரை நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய தருணம் இது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மன உறுதியையும் மாண்பையும் சுய மதிப்பையும் குலைக்கிற விதத்தில், அவர்களைப் பாலியல் வன்முறைக்கு உள்படுத்துவது சந்தேகத்துக்கு இடமின்றி இனப்படுகொலைக் குற்றம். கிரெனடா நாட்டின் கருப்பினச் சகோதரி கிமாலி பிலிப், ஈழத்துச் சகோதரிகள் மீது திட்டமிட்ட வகையில் பாலியல் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதை அம்பலப்படுத்தி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ‘இலங்கை ராணுவம், கற்பழிப்பைக் கூட ஓர் கொடுமையான ஆயுதமாகப் பயன்படுத்தியது’ என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியவர் அவர்.

மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் ராத் ஹுசெய்னின் அறிக்கை, கிமாலி முன்மொழிந்ததை அப்படியே வழிமொழிகிறது. தடுத்து வைக்கப்பட்டோர் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் மிருகத்தனமான பாலியல் வன்முறையில் இறங்கியதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் ஹுசெய்ன்.
‘பெண்கள் மட்டுமில்லை… இளைஞர்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர். இதை எவருடைய தனிப்பட்ட செய்கையாகவும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. சித்திரவதை செய்வதை நோக்கமாகவும் கொள்கையாகவும் கொண்டு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொடுமையாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. ராணுவ விசாரணைகளின் போது பாலியல் சித்திரவதைகளும், விசாரணை இல்லாத வேறு நேரங்களில் பாலியல் வல்லுறவுகளும் நிகழ்ந்திருக்கின்றன’ என்கிறது ஹுசெய்னின் அறிக்கை.
எங்கள் சகோதரிகளும், இளைஞர்களும் இப்படியொரு கொடுஞ்சித்திரவதைக்குத் திட்டமிட்டு ஆளாக்கப்பட்டதை ஹுசெய்ன் என்கிற மனிதர் உருக்கமான வார்த்தைகளால் விவரித்தபிறகும், ‘நடந்தது இனப்படுகொலை இல்லை’ என்று அடித்துச் சொல்கிற அளவுக்கு அலரி மாளிகையின் அடப்பக்காரர்களாகவே இருக்க விரும்பும் சட்டத்தரணிகளின் சட்டையைப் பிடித்து உலுக்கினால் அல்லாமல் தமிழினம் தனக்கான நியாயத்தைப் பெறவே முடியாது.
ஹுசெய்ன், தான் வகிக்கிற பதவிக்குக் களங்கம் ஏற்பட்டுவிடாதபடி தெள்ளத்தெளிவாகப் பேசுகிறார். இதுவரை நேரடி விசாரணைக்கு இலங்கை அனுமதிக்காத நிலையில், இனப்படுகொலை என்று சொல்வதற்கான ஆதாரங்களை முழுமையாகப் பெற முடியவில்லை – என்கிற ஹுசெய்னின் விளக்கத்தை விளங்கிக் கொள்ள, அறிவு வியாபாரிகளால் முடியவேயில்லையா?
வடகிழக்கைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கத்தோலிக்க ஆயர்கள், இலங்கையை இலங்கையே விசாரித்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிற அமெரிக்காவின் இரட்டை வேடத்தைக் கண்டித்திருக்கிறார்கள். ‘சர்வதேச விசாரணை மூலம்தான் நீதி கிடைக்கும்… பிழையான வழியை அமெரிக்கா காட்டக்கூடாது… சென்ற ஆண்டு சர்வதேச விசாரணையை வலியுறுத்திய அமெரிக்கா, இந்த ஆண்டு அதற்கு நேர்மாறான நிலையை எடுப்பது நியாயமில்லை’ என்கிறது அவர்களது கடிதம். வடகிழக்கு ஆயர்களின் கருத்தை அமெரிக்காவும் இலங்கையும் ஏற்குமா புறக்கணிக்குமா என்பது வேறு விஷயம். தமிழினத்தின் ஏகபோக பிரதிநிதியாகவே மகுடம் சூட்டப்பட்டுவிட்ட சமந்தகர்கள் இதை ஏற்கிறார்களா இல்லையா?
கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் நசுக்கப்பட்ட தமிழ்ச் சகோதரிகளுக்காகவும் நீதி கேட்கும்பொருட்டு ஜெனிவாவில் புயல் போன்று மையம் கொண்டிருக்கும் கல்லம் மேக்ரே என்கிற பத்திரிகையாளன் மானுடனென்றால், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகவும் சர்வதேச விசாரணையைத் தடுப்பதற்காகவும் மட்டுமே அமெரிக்காவுக்குப் பறக்கும் சட்டத்தரணிகள் யார்? அவர்கள் ஒவ்வொருமுறை அமெரிக்காவுக்குப் பறக்கும்போதும், கூட்டமைப்பின் மானமும் மரியாதையும் சேர்ந்தே பறக்கிறதே….. மாவையும் சிறீதரனும் இவ்வளவுக்கும் பிறகுமா அதை வேடிக்கை பார்க்கப் போகிறார்கள்?
கலப்பு நீதிமன்றம் – என்பதே பிழையான யோசனை, சர்வதேச விசாரணை தான் சரி, குற்றவாளியை விசாரிக்கிற பணியில் குற்றவாளியையே எப்படி ஈடுபடுத்த முடியும் – என்பது நமது நியாயமான கேள்வி. கொலைக் குற்றவாளி எவனிடமாவது, ‘உங்களுக்கு எந்த மாதிரியான விசாரணை பிடிக்கும்’ என்று ஆறாவது அறிவுள்ள எவரேனும் கேட்டுக் கொண்டிருப்பார்களா? இந்தப் பிழையைத்தான் கடுமையாக எதிர்க்கிறோம் நாம். சமந்தகர்களின் சம்மதத்துடன், ‘கலப்பு நீதிமன்றம்’ என்கிற வார்த்தையே மாற்றப்படுவதும், ‘பன்னாட்டு நீதிபதிகள்’ என்கிற வார்த்தை ‘காமன்வெல்த் நீதிபதிகள்‘ என்று மாற்றப்படுவதும், சொந்த இனத்தின் முதுகில் குத்துகிற வேலையன்றி வேறென்ன?
காமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இலங்கைதான் இருக்கிறது, இப்போதும்! அந்த அமைப்பின் செயலாளராக இருக்கும் கமலேஷ் சர்மா, மகிந்த ராஜபக்சவின் நம்பர் ஒன் கைத்தடி. அப்படியொரு அமைப்பு நீதி கிடைக்க எப்படித் துணை நிற்கும்?
‘நமது பெயரால் பிறருக்குக் கொடுமை செய்தவர்கள்’ என்று கூசாமல் பேசுகிற சமந்தகர்கள், கொன்று குவிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு எவரது பெயரால் கொடுமையிழைக்க முயற்சிக்கிறார்கள்?
மின்சார நாற்காலியில் ஏறவும் தயார் – என்பதுதானே, சென்றமாதம் வரை மகிந்த ராஜபக்சவின் கொள்கையாக இருந்தது….. ‘எந்த விசாரணைக்கும், அது எந்த நாட்டில் நடந்தாலும், நான் தயார்’ என்பதுதானே சரத் பொன்சேகாவின் ஆசையாக இருந்தது. …. அவர்களது விருப்பத்துக்குக் குறுக்கே நிற்க சமந்தகர்கள் யார்?
‘ராணுவத்தினர் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்… கூண்டில் நிறுத்தப்படுவார்கள் – என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதை யாரும் நம்பவேண்டாம்… அதற்காக யாரும் அஞ்சவேண்டாம்’ – என்று அவசர அவசரமாக அறிவித்திருக்கிற சிங்கள பௌத்த அமைப்பான ஜாதிக ஹெல உருமய, ‘புலிகளுக்கு நிதி வழங்கியவர்கள், வாகனங்களை விநியோகித்தவர்கள், ஆலோசனை வழங்கியவர்கள் உள்பட எவரும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது’ என்று எச்சரிக்கவும் செய்திருக்கிறதே… சமந்தகர்கள் அதை கவனித்தார்களா இல்லையா?
உருமயவின் செயலாளர் சம்பிக்க ரணவக்க தான், ஹுசெய்னின் அறிக்கையைக் கடுமையாக விமர்சித்தவர். ‘இது பயங்கரவாதிகளுக்கு சார்பான அறிக்கை… அதனால் இதில் சொன்ன எதையும் நிறைவேற்றத் தேவையில்லை’ என்று அறிவுரை சொன்னவர். அவர்தான் இப்போது, புலிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். அவர் சொல்வதிலிருந்து இன்னொன்று புரிகிறது நமக்கு! ரணவக்க சொல்வது நிஜமென்றால், இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தவர்கள், இலங்கைக்கு விமானங்களையும் கப்பல்களையும் ரேடார்களையும் கொடுத்தவர்கள் மட்டும் தப்பிவிட முடியுமா? சர்வதேச கத்தி எவர் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பது புரிகிறதா உங்களுக்கு!
தனது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தது என்பதற்காக குற்றவாளிகளில் ஒருவர் பெயர்கூட வெளியாகிவிடாமல் மைத்திரி தடுத்திருக்கிறார் என்றால், தங்கள் பக்கம் விசாரணை திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவே ஆயுதம் உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விசாரணையைத் தடுக்க முயல்கின்றன. ஆக, இந்தியாவும் மைத்திரியும் ஒரே தட்டில் தான் நிற்கிறார்கள் இப்போது!
கூட்டுக் குற்றவாளிகளான அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நேர்மாறான நடுநிலைப் பார்வையுடன் நிற்கிற ஒரே தரப்பு தமிழர் தரப்புதான். (நான் சமந்தகர்களைச் சொல்லவில்லை… நீதி கேட்கும் தமிழர்களைச் சொல்கிறேன்).
ஹுசெய்னின் அறிக்கையில் ‘இரு தரப்புக் குற்றங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதற்காக, அவர் மீது ஒரு துரும்பையாவது தூக்கி எறிந்திருக்கிறோமா நாம்? ஒருமித்த குரலில், அவரது அறிக்கையை வரவேற்றிருக்கிறோம். அதே சமயம், குற்றஞ்சாட்டப்பட்ட இரு தரப்பில் ஒரு தரப்பை நீதிபதி நாற்காலியில் உட்கார வைத்துவிடக் கூடாது என்கிற நியாயமான கோரிக்கையை முன்வைக்கிறோம். சேம் சைடு கோல் போடுவதில் வல்லவர்களான சமந்தகர்களுக்கு இது புரியவில்லை என்றா நினைக்கிறீர்கள்!
சர்வதேச விசாரணைதான், குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றும்… நடந்தது இனப்படுகொலைதான் என்பதை அம்பலப்படுத்தும்… பொய்க் குற்றச்சாட்டுகளைத் தகர்க்கும். இந்தக் காரணத்துக்காகத்தான் நாம் சர்வதேச விசாரணை கோருகிறோம்…. இதே காரணங்களுக்காகத்தான், என்னை நானே விசாரித்துக் கொள்வேன் என்கிறது இலங்கை. ஹுசெய்னின் அறிக்கைக்குப் பிறகும் நம்மால் நியாயம் பெற முடியாதென்றால், இந்த இனம் எந்தக் காலத்திலும் நியாயம் பெற முடியாது.
இந்த விஷயத்தில், ஒன்றரை லட்சம் உயிர்களுக்குத் துரோகம் செய்ய முயல்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் ஒரு வல்லரசாக இருக்கட்டும், ஒரு கூட்டமைப்பாக இருக்கட்டும், அவ்வளவு ஏன்… அது எமது தாய்நாடாகவே இருக்கட்டும்…. எவரையும் நாம் அனுமதித்துவிடக் கூடாது. தாய்நாடு என்கிற உரிமையுடன் எம் இனத்தின் முதுகில் குத்த முயலும் என்றால், இந்த இந்தியாவை எப்படித் தூக்கிச் சுமக்க முடியும் நாம்!

No comments:

Post a Comment