November 28, 2014

வாஜ்பாய் வழியைப் பின்பற்றுங்கள்: மோடிக்கு வைகோ வலியுறுத்தல்!

இலங்கை நாட்டுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நடந்து கொண்டதைப் போல மோடியும் நடந்து கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச்
செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். மதிமுக சார்பில் சென்னை தியாகராயநகரில் தியாகத் திரு நாள் மற்றும் மலேசியாவில் நடைபெற்ற பினாங்கு மாநாட்டுப் பிரகடன விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
அப்போது, “ஈழ போராட்டத்தைத் தமிழக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு, முதலில் அவர்களை மது பழக்கம் இல்லாமல் ஒழுக்கம் உள்ளவர்களாக மாற்ற வேண்டும். அதற்கு பிறகுதான் நம் லட்சியத்திற்கு அவர்களை அழைத்து செல்ல முடியும். சார்க் மாநாட்டில், பேசிய மோடி இலங்கையில் அடுத்த தேர்தலில் வெற்றி பெற ராஜபக்சேவுக்கு வாழ்த்து கூறியதன் மூலம் பிரதமர் பதவியை அவர் களங்கப்படுத்தி விட்டார்.
இதுவரையிலும் எந்த பிரதமரும், இலங்கை உள்பட எந்த நாட்டு தேர்தல் என்றாலும், வெற்றி பெறுவதற்கு முன்னாள் வாழ்த்து கூறியது இல்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக்கு ஆயுத உதவியோ, பண உதவியோ செய்ய மாட்டோம், ஆயுதங்களை விலை கொடுத்து வாங்குவதாக இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு விற்பதாக இல்லை என்று அறிவித்தார். வாஜ்பாய் வழியை நரேந்திரமோடி கடைபிடிக்க வேண்டும்.
4 மீனவர்கள் விடுதலையில் நரேந்திரமோடி அரசு நாடகம் ஆடியது. தமிழீழம் தொடர்பாக உலக நாடுகளில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களிடையே அந்தந்த நாடுகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி செய்தால் 90 சதவீத தமிழர்கள் வாக்களிப்பார்கள். இதை ஐ.நா. மேற்பார்வையில் நடத்த வேண்டும். அத்துடன் தமிழக மீனவர்களை இந்திய அரசு பாதுகாக்க வேண்டும் உள்பட பல்வேறு பிரகடனங்களை மலேசியாவின் பினாங்கில் நிறைவேற்றினோம்.
இதே தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய துணிச்சல் ஜெயலலிதாவுக்கு உண்டு. அதனால் வரலாறு உங்களுக்கு பொன் மகுடம் சூட்டும்.
அதேபோன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இதே தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அதற்கு மத்திய அரசு நமக்கு சாதகமாக இல்லை. மாறாக ராஜபக்சேவுக்கு வாழ்த்துக் கூறும் நிலையில் தான் உள்ளது. நம் பக்கம் நியாயம் உள்ளது. பிரிவினையை நாங்கள் கேட்கவில்லை. இழந்த சுதந்திரத்தைத் தான் கேட்கிறோம்.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு நதிநீர் பிரச்சினையில் வஞ்சகம் செய்து வருகிறது. மத்திய அரசு அதைத் தடுக்க மறுக்கிறது. தங்களுடைய மாநிலத்தில் உற்பத்தியாகும் நதிகள், தங்களுக்கே சொந்தம் என்று கூறினால், நாங்களும் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் எங்களுக்கே சொந்தம் என்று கூற வேண்டிய நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள்.
இந்தி திணிப்பை தமிழகத்தில் திணித்தால், தமிழகம் தனித்து போவதைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறினார்.

No comments:

Post a Comment