August 15, 2016

யோஷித்தவுக்கு சொந்தமான மேலும் 572.8 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் அரசுடமை

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், கால்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக உரிமை கோர முடியாத மேலும் 572.8 மில்லியன் ரூபா சொத்துக்கள் இருப்பதை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.


ஒளிப்பரப்பு உபகரணங்களுடன் கூடிய 80 மில்லியன் ரூபா பெறுமதியான நடமாடும் ஒளிப்பரப்பு ட்ரக் வாகனம், லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவத்தின் இலக்கம் 2200060234 என்ற கணக்கில் இருக்கும் 6 மில்லியன் ரூபா பணம், ஹம்பாந்தோட்டை சிறிபோபுர கிராமத்தில் இருக்கும் 4.8 மில்லியன் ரூபா பெறுமதியான 0.150 ஹெக்டேயர் நிலம், பத்தரமுல்லை டென்சில் கொப்பேகடு மாவத்தையில் இலக்கம் 236/1 விலாசத்தில் இருக்கும் 200 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடம், 235 மில்லியன் பெறுமதியான கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் தொலைக்காட்சி நிறுவனத்தின் அசையும் அசையா சொத்துக்கள், ஒளிப்பரப்பு கருவிகள், நுகோகொடை ஸ்டென்லி திலக்கரட்ன மாவத்தை, 219/1 என்ற விலாசத்தில் இருக்கும் 65 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டிடம் ஆகியன இந்த சொத்துக்களில் அடங்கும்.

மேலும் யோஷித்த ராஜபக்ச தனது பாட்டியின் பெயரில் கல்கிஸ்சை நெல்லிகாவத்தை பகுதியில் கொள்வனவு செய்துள்ள 10 காணிகள், இரத்மலானையில் உள்ள 31.5 பேர்ச்சஸ் காணி, கல்கிஸ்சையில் 5 பேர்ச்சஸ் காணியையும் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவற்றின் பெறுமதி 65.68 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த அனைத்து சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே பான் ஏசியா வங்கியின் 312583900111 என்ற வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்த உரிமை கோரப்படாத 157.5 மில்லியன் ரூபாவை கடுவலை நீதவான் அரசுடமையாக்கி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த பணமும் யோஷித்த ராஜபக்சவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் நிறுவனத்தின் பணம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment