July 31, 2016

மல்லையா தப்பி செல்ல சு.சுவாமி உதவினாரா??

தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லுவதற்கு சுப்பிரமணியன் சுவாமி உதவினாரா? இதற்கு பிரதமர் மோடி ஆதரவு அளித்தாரா? என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.


பிரபல தொழில் அதிபரும் மாநிலங்களவை எம்.பி.யுமான விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை.

இதைத் தொடர்ந்து ”வேண்டும் என்றே கடனை திருப்பித் தராதவர்’ என்று இந்த வங்கிகளால் விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டார். அவருக்கு கடன் கொடுத்த 13 வங்கிகள் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

மேலும், விஜய் மல்லையா வெளிநாட்டுக்குச் சென்று விடாமல் தடுக்க வேண்டும் என்று வங்கிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.ஆனாலும் கடந்த 2-ம் தேதியே விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து வெளியேறி இங்கிலாந்துக்கு சென்று விட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவரமுடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கிகளிடம் இருந்து கிங் ஃபிஷர் நிறுவனம் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத விவகாரம் தொடர்பாக கிங் ஃபிஷர் நிறுவனம், யூ.பி. குழும நிறுவனம் ஆகியவற்றின் முன்னாள் தலைமை நிதி அதிகாரிகளான ரகுநாதன், ரவி நெடுங்காடி ஆகியோரிடம் சி.பி.ஐ. நேற்று விசாரணை நடத்தி உள்ளது.இதனிடையே, இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரமோத் திவாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”விஜய் மல்லையாவுக்கும், சுப்பிரமணியன் சுவாமிக்கும் மிகவும் நெருங்கிய தொடர்புள்ளது.

சுவாமியின் ஜனதா கட்சியில் 2003-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை விஜய் மல்லையா தேசிய செயல் தலைவராக இருந்துள்ளார்.அதனால், இந்த விவகாரம் குறித்து சுப்பிரமணியன் சுவாமியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு மல்லையா தப்பிச் செல்லுவதற்கு சுப்பிரமணியன் சுவாமி உதவினாரா? இதற்கு பிரதமர் மோடி ஆதரவு அளித்தாரா? என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment