July 21, 2016

பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை: க. வி. விக்னேஸ்வரன் - சி.தவராசா!

பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை நடாத்தப்பட வேண்டும் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் அண்மையில் ஏற்பட்ட கைகலப்பு ஓர் துரதிர்ஷட வசமான சம்பவமாகும்.
இது தொடர்பாக விசாரிப்பதற்காக பல்கலைக்கழகத்தினால் ஓர் குழு அமைக்கப்பட்டிருப்பதனை வரவேற்கின்ற அதே வேளையில், இச் சம்பவத்தை ஓர் சாதாரண குற்றவியல் சம்பவமாகக் கருதாமல் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொண்டமைக்கான அடிப்படைக் காரணிகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளைக்  கண்டறிந்து செயற்படுத்துவதன் மூலந் தான் இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருப்பதனை உறுதி செய்ய முடியும்.


வெறுமனே இவ்வாறான சம்பவங்களைக் கண்டிப்பதனாலோ, சம்பந்தப்பட்ட மாணவர்களை விசாரித்து தண்டிப்பதன் ஊடாகவோ நாம் உண்மையான புரிந்துணர்வையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியாது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தமக்கு நியாயங்களைக் கோரி சாத்வீக ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளை அலட்சியம் செய்து  அவற்றினை ஓர் குற்றவியல் செயற்பாடாகக் கருதியதன் விளைவாகவே இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நேர்ந்தது.


ஆதலினால், பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான நிலைமைக்குச் செல்வதற்கு அடிப்படையாக இருந்த காரணிகளை முற்றாக அறிவதற்கு ஓர் ஆக்க பூர்வமான விசாரணைக்குழு அமைத்து ஒரு பூரண விசாரணை நடாத்தப்படவேண்டும் என்று கோருகின்றோம்.  இவ்வாறு செயற்படுவதன் மூலமே மாணவர்களின் உண்மையான ஆதங்கங்களை அறிந்து அதனைத் தணிப்பதற்கான வழிமுறைகளை ஆராயமுடியும்.  மேலெழுந்த வாரியான செயற்பாடுகள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யுமேயொழிய உண்மையான புரிந்துணர்தலை ஏற்படுத்த வழிகோலாது.


போருக்குப்பின்னரான காலப்பகுதியில் வடகிழக்கின் குடிப்பரம்பலை மாற்றுகின்ற எண்ணப்பாட்டு செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், யுத்தக்குற்ற சுயாதீன விசாரணைகள் தொடர்பில் இழுத்தடிப்பு நிலை காணப்படும்; சூழலில், பெருவாரியான பிற மாகாண மாணவ மாணவியர் வடமாகாண பல்கலைக்கழகத்தில் சேர்த்தமையும் அவர்கள் தங்கள் கலாசாரங்களை திணிக்க முனைவதும், தமிழர்களின் பாரம்பரிய வதிவிடங்களில் தமது அரசியல் விவகாரங்களை தாமே கையாளக்கூடிய வகையிலான அரசியல் தீர்வொன்றினை வழங்குவதில் தெளிவற்ற போக்கும், வட கிழக்கில் தேவைக்கதிகமான இராணுவத்தினர் தொடர்ந்து இருந்து வருவதும் இவ்வாறான நடவடிக்கைகளுக்குத் தீனி போட்டிருந்தனவா போன்ற விடயங்களும் அவ்விசாரணைக் குழுவினால் ஆராயப்பட வேண்டியிருக்கும்.


தெற்கிலுள்ள இனவாதிகள் இவ்வாறான சம்பவங்களைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி அரசியல் லாபம் பெறுவதனை தடுப்பதற்கும் இவ்வாறான ஏற்பாடு வழிகோலும். இதனை நாங்கள் ஒருமித்து வெளியிடுவதன் காரணம் வடமாகாணசபை, கட்சி பேதமில்லாது இவ்விடயத்தில் கரிசனை கொண்டிருக்கின்றது என்பதை வலியுறுத்தவே.


நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன்            

முதலமைச்சர்,                        

சி.தவராசா

எதிர்க்கட்சித் தலைவர்,
வடமாகாணம்.                          

வடக்கு மாகாண சபை.

No comments:

Post a Comment