May 31, 2016

கேப்பாப்பிலவு சூட்டு சம்பவத்திற்கு பக்கச்சார்பற்ற பகிரங்க விசாரணை வேண்டும்! சிவசக்தி ஆனந்தன் எம்.பி!

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் வசித்துவரும் வி.தியீபன் என்பவரது வீட்டுக்குள் கடந்த 28ஆம் திகதி சிவில் உடையில் நுழைந்த
இருவர் தம்மை பொலிஸார் என்று அடையாள படுத்திக்கொண்டு குறித்த இளைஞரை கைதுசெய்ய வந்துள்ளதாகவும், அதற்குரிய நீதிமன்ற பிடியாணை தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் அந்த நீதிமன்ற பிடியாணையை தனக்கு காட்டுமாறு கோரியபோது காட்ட மறுத்தவர்கள், நீதிமன்ற பிடியாணையை காட்டாவிட்டால் வரமாட்டேன் என்று எதிர்ப்பு தெரிவித்த இளைஞன் மீது துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதிஸ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்துக்கு வன்னி மாவட்ட மக்களின் சார்பாக எனது கண்டனத்தை தெரிவிக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்றதற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருவதாகவும், அவர் ஒவ்வொரு வழக்குக்கும் தவறாமல் சமுகமளித்து வருவதாகவும், இன்று (30.05.2016) வழக்கு தவணை ஒன்று இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தொடர்ச்சியாக நீதிமன்ற விசாரணைக்கு சமுகமளித்துவருவதாக கூறப்படும் அவரை கைதுசெய்யுமறு அழைப்பாணை அனுப்பியது யார்?

அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸார் அதனை காட்ட மறுத்தது ஏன்? தப்பிச்செல்ல எத்தனிக்காத, பொலிஸாரை தாக்க முற்படாத குறித்த சந்தேக நபர் மீது அதுவும் வீட்டுக்குள் வைத்து பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு தேவை என்ன இருந்தது? என்ற கேள்விகளும் எழுகின்றன.

இந்த இடத்தில் குறித்த சந்தேக நபரினுடைய அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது. அத்துமீறி அவர் மீது துப்பாக்கிச்சூடு பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் தான் இவ்வாறான சட்டவிரோத சூடுகளும், கொலைகளும், கடத்தல்களும், காணாமல் ஆக்கப்படுதல்களும் மலிந்து காணப்பட்டன.

தற்போதைய ஆட்சியில் அத்தகைய நிலைமைகள் இல்லை என்று ஜனாதிபதியும், பிரதமரும் கூறிவரும் நிலையிலேயே கேப்பாப்பிலவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தற்போதைய நல்லாட்சி அரசும் தமிழ் மக்களை கிள்ளுக்கீரைகளாக, புல் பூண்டு பூச்சிகளாக கருதியே நடத்தி வருகின்றது என்பதற்கு ஓர் உதாரணமாகும்.

கையில் துப்பாக்கி உள்ளது என்ற தைரியத்தில் எதையும் செய்ய துணிபவர்களிடம் அஎவ்வாறு நியாயத்தை எதிர்பார்ப்பது?

ஆகவே இந்த சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை நடத்தியவர்கள் மீது பக்கச்சார்பற்ற பகிரங்க விசாரணை நடத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

அதுவே நல்லாட்சி அரசுக்குள்ள ஒரே வழியாகும். இந்த விடயம் தொடர்பாக பொலிஸ்மா அதிபரின் நேரடி கவனத்துக்கும் தான் கொண்டு சென்றுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment