May 30, 2016

தமிழக முகாம்களில் இருந்து 65 அகதிகள் மாயம் ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல திட்டமா?

தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து மாயமான 65 அகதிகள் எங்கே? என்பது குறித்தும்,
அவர்கள் ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தூத்துக்குடியில் முகாமிட்டு உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இலங்கை அகதிகள்

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் தாப்பாத்தி, குளத்துவாய்பட்டி, தூத்துக்குடி ராம்தாஸ்நகர் ஆகிய 3 இடங்களில் அகதிகள் முகாம்கள் உள்ளன.

இந்த நிலையில் சென்னை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 65 இலங்கை அகதிகள் தப்பி தலைமறைவாகி விட்டனர்.

கண்காணிப்பு

அவர்கள் கேரளா அல்லது தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து இன்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்கின்றன. இதனால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதே நேரத்தில் கேரளாவில் பதுங்கி இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதி, அங்கும் ஒரு தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

No comments:

Post a Comment