September 18, 2015

மன்னார் ஆயர் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது..!

மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள், மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்குச் சென்று தேனீர் அருந்திய நிலையிலே அவர் திடீர் உபாதைக்கு உள்ளாகியதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களும், அருட்தந்தை ஒருவரும் கொழும்புக்குச் செல்லும் போது மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதாகவும், அதன் போது அவர்களுக்கு தேனீர் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தேனீரை அருந்திய நிலையிலே மன்னார் மறைமாவட்ட ஆயர் திடீர் சுகயீனமடைந்ததாகவும்,மற்றைய அருட்தந்தை உயிரிழந்துள்ளதாகவும் வெளியாகிய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் அருட்தந்தை மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்கு செல்லவில்லை.  அவருக்கு ஏற்பட்டது திடீர் சுகவீனம் என்பது வைத்தியர்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதனால் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.
மன்னார் ஆயர் தேனீர் அருந்திய நிலையில் சுகயீனம் எற்பட்டது என்பதனை மன்னார் ஆயர் இல்லம் முற்றாக மறுத்துள்ளது என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்தார்.

No comments:

Post a Comment